குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கண்களை கட்டியும் கருப்பு பலூன்கள் பறக்கவிட்டும் இஸ்லாமியர்கள் கோஷம்: டெல்டாவில் பதற்றம்
2/27/2020 3:21:05 PM
திருச்சி: குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக முத்துப்பேட்டையில் கண்களை கட்டியும் கருப்பு பலூன்களை பறக்கவிட்டு கோஷமிட்டனர். குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக்கோரியும், தமிழகத்தில் சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் கணக்கெடுப்பை நடத்தக்கூடாது என்று வலியுறுத்தியும் மாநிலம் முழுவதும் முஸ்லிம் அமைப்பினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள சக்கராபள்ளியில் இஸ்லாமிய கூட்டமைப்பினர் இன்று 8வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று பங்கேற்ற ஆண்கள், பெண்கள் கண்களில் கருப்பு துணி கட்டி மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். தஞ்சை கீழவாசல் ஆட்டு மந்தையில் 12வது நாளாக இன்று இஸ்லாமியர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டெல்லி சம்பவத்தை கண்டித்து போராட்டத்தில் கருப்பு பலூன்கள் பறக்கவிடப்பட்டன. திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை புதுத்ெதரு திடலில் அனைத்து ஜமாத் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் ஒருங்கிணைந்து இன்று 13வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்றிரவு போராட்டத்தில் கலந்துக்கொண்ட சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமிய ஆண்கள், பெண்கள் குழந்தைகள் அனைவரும் ஒரே நேரத்தில் கண்ணில் கருப்புதுணி கட்டி நூதனப்போராட்டத்தில் ஈடுபட்டு மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். கூத்தாநல்லூர் காவல் நிலையம் அருகே அனைத்து ஜமாத்தார் சார்பில் 13வது நாளாக இன்று போராட்டம் நடந்து வருகிறது. புதுக்கோட்டை கலீப் நகர் 4ம் வீதியில் காத்திருப்பு போராட்டம் முதல்நாளாக நேற்று மாலை தொடங்கியது. உரிமை மீட்புக் குழு என்ற பெயரில் தொடங்கியுள்ள இப்போராட்டத்தில் பெண்களும் தனிப் பகுதியில் அமர்ந்துள்ளனர். சட்டத் திருத்தத்தைத் திரும்பப் பெறும் வரையில் தொடர் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளனர். கறம்பக்குடி புளியன்சோலை பகுதி மதரசா பள்ளிவாசல் 9வது நாளாகவும், மணமேல்குடி அருகே அம்மாபட்டினத்திலும் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.