திருவொற்றியூரில் திமுக எம்எல்ஏ கேபிபி.சாமி மரணம்: மு.க.ஸ்டாலின் அஞ்சலி
2/27/2020 3:20:13 PM
சென்னை: திருவொற்றியூர் திமுக எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான கேபிபி.சாமி உடல்நலக் குறைவால் இன்று காலை மரணமடைந்தார். அவருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்பட ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். திருவொற்றியூர், எம்எல்ஏவாக இருப்பவர் கேபிபி.சாமி (58). கேவிகே குப்பத்தில் வசித்து வருகிறார். திமுக அமைச்சரவையில் மீன்வளத்துறை அமைச்சராகவும் பணியாற்றினார். இவர் கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், அவரது உடல்நிலை மோசமாகி, இன்று காலை 6.10 மணியளவில் கேவிகே.குப்பத்தில் உள்ள அவரது வீட்டில் மரணமடைந்தார். கேபிபி.சாமி, திமுகவின் மூத்த உறுப்பினரும் முன்னாள் கவுன்சிலருமான பரசுராமன் என்பவரின் மகன் ஆவார். இவர், திமுகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தவர்.
கடந்த 2006-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், திருவொற்றியூர் தொகுதி எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டு மீன்வளத்துறை அமைச்சராகப் பணியாற்றினார். இதைத் தொடர்ந்து கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், மீண்டும் திருவொற்றியூர் தொகுதியில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக இருந்து வந்தார். மேலும், அவருக்கு திமுக மாநில மீனவரணி அமைப்பாளர் பதவி கொடுக்கப்பட்டது. மறைந்த கேபிபி.சாமியின் மனைவி உமா. மூத்த மகன் இனியவன். இளைய மகன் பரசு பிரபாகரன். ஒரு மகள் உள்ளார். முன்னாள் கவுன்சிலரான உமா, மூத்த மகன் இனியவன் ஆகிய இருவரும் ஏற்கனவே மரணம் அடைந்துவிட்டனர். அவரது மகள் திருமணமாகி, தனது கணவரோடு ஆஸ்திரேலியாவில் குடியிருந்து வருகிறார். கேபிபி சாமிக்கு கே.பி.சங்கர், கே.பி.இளங்கோ, கே.பி.சொக்கலிங்கம் என 3 சகோதரர்களும், 2 சகோதரிகளும் உள்ளனர்.
இதில் முன்னாள் கவுன்சிலரான கே.பி.சங்கர், திருவொற்றியூர் மேற்கு பகுதி திமுக செயலாளராகவும், முன்னாள் கவுன்சிலரான கே.பி.சொக்கலிங்கம் வட்ட செயலாளராகவும் உள்ளனர். இவரது குடும்பத்தினர் திமுகவில் பல்வேறு பொறுப்புகளில் இருந்துள்ளனர். மீனவர் பகுதியில் திமுகவை வளர்க்க கே.பி.பி.சாமி முக்கிய பங்காற்றியவர். மறைந்த கலைஞர் கருணாநிதியிடம் மிக நெருக்கமாக இருந்தவர். கேபிபி.சாமியின் உடல், திருவொற்றியூர் கேவிகே.குப்பத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்ததும் திருவொற்றியூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த திமுக மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த பிரமுகர்கள், உறவினர்கள், நண்பர்கள் என பலரும் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று கேபிபி.சாமியின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் மாவட்ட செயலாளர்கள் மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ, பி.கே.சேகர்பாபு எம்எல்ஏ, ஆவடி நாசர், பகுதி செயலாளர்கள் தி.மு.தனியரசு, மருதுகணேஷ் உள்பட பல முக்கிய நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். மூத்த நிர்வாகிகள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நாளை மாலை 3 மணிக்கு பட்டினத்தார் கோயில் தெரு அருகே உள்ள மயானத்தில் மறைந்த கேபிபி.சாமியின் உடல் தகனம் செய்யப்படுகிறது என அவரது குடும்பத்தினர் தகவல் தெரிவித்தனர்.