தொழிலதிபர்கள் வீடுகளில் ஐடி ரெய்டு மூட்டை மூட்டையாக பணம் பறிமுதல்: ஆரணியில் பரபரப்பு
2/27/2020 3:19:13 PM
ஆரணி: ஆரணியில் தொழிலதிபர்கள் வீடுகளில் நடத்தப்பட்ட ஐடி சோதனையில் மூட்டை, மூட்டையாக பணம் மற்றும் ஆவணங்கள் சிக்கியது.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி கொசப்பாளையம் தர்மராஜா கோயில் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன், அவரது தம்பி சிவக்குமார் மற்றும் சொக்கலிங்கம், அவரது சகோதரர் ராமலிங்கம் ஆகியோர் பட்டுச்சேலை உற்பத்தி செய்யும் நிறுவனம் வைத்தள்ளனர். இவர்கள் முறையாக கணக்கு காட்டாமல், குறைவான வரியை செலுத்தியதாகவும், பணம் மற்றும் சொத்துக்களை ஏராளமாக குவித்துள்ளதாகவும் வருமான வரித்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், சென்னை, வேலூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய பகுதிகளை சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரிகள் 30 பேர் குழுவினர், சென்னை இணை ஆணையாளர் சுப்பாராவ் தலைமையில் நேற்று முன்தினம் மதியம் 1.30 மணி முதல் நேற்று இரவு வரை 4 பேர்களின் வீடு, கடைகள் மற்றும் திருமண மண்டபங்கள் என 16 இடங்களில் ஒரே நேரத்தில் அதிரடி சோதனை செய்தனர்.
இதுபோல் ஆரணி அருணாகிரிசத்திரம் ஈஸ்வரன் கோயில் தெருவைச் சேர்ந்த தர்மலிங்கம், இவரது மகன்கள் சண்முகம், ரமேஷ், இளையராஜா, நித்தி, பாக்யராஜ் ஆகியோருக்கு சொந்தமான திருமண மண்டபம், சில்க்ஸ், பட்டு சேலை தயாரிப்பு நிறுவனம் மற்றும் கடைகளில் வருமான வரித்துறையினர் ஆய்வு நடத்தினர். இதில் கணக்கில் வராத ஆணவங்கள், லட்சக்கணக்கில் பணம் ஆகியவற்றை மூட்டை, மூட்டையாக பறிமுதல் செய்து 3 கார்களில் நேற்றிரவு சென்னைக்கு எடுத்து சென்றனர். இந்த சோதனையில் வரி ஏய்ப்பு செய்தது தெரியவந்துள்ளது. எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினர். வருமான வரி சோதனையை தொடர்ந்து, அப்பகுதியில் பட்டு சேலை உரிமையாளர்கள் கடைகளை பூட்டி விட்டு தலைமறைவாகி விட்டனர். ஆரணியில் வருமான வரித்துறையினர் சோதனையில் மூட்டை மூட்டையாக ஆவணங்கள், பணம் பறிமுதல் செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.