தமிழகம் முழுவதும் 3வது நாளாக காத்திருப்பு போராட்டம்: முதல்வர் அவசர ஆலோசனை: போராட்டத்தை கண்காணிக்க 6 சிறப்பு அதிகாரிகள் நியமனம்
2/16/2020 2:22:41 PM
சென்னை: சென்னையில் போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்து தமிழகம் முழுவதும் 3வது நாளாக இன்றும் பல்வேறு இடங்களில் இஸ்லாமியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால், போலீஸ் டிஜிபி உள்பட உயர் அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அவசர ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் போராட்டத்தை கண்காணிக்க 6 சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி நாடு முழுவதும் முஸ்லிம் அமைப்புகள் மற்றும் எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. நேற்று முன்தினம் சென்னை வண்ணாரப்பேட்டை லாலாகுண்டா பகுதியில் 500க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கையில் பதாகைகள் ஏந்தியும், கோஷங்களை எழுப்பியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் இரவு வரை நீடித்தது.
இதனால், கூடுதல் கமிஷனர் தினகரன், இணை கமிஷனர் கபில்குமர் சரத்கர், துணை கமிஷனர் சுப்புலட்சுமி ஆகியோரது தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். அவர்கள், கூட்டத்தினரை கலைந்து செல்லும்படி வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் அவர்கள் கலைந்து செல்லவில்லை. இதனால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் ஒருவர் உயிரிழந்ததாக கூறப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு சிலரை போலீசார் சரமாரியாக தாக்கி, தரதரவென இழுத்துச் சென்று வாகனத்தில் ஏற்றினர். தடியடி நடத்தியதில் பலருக்கு காயம் ஏற்பட்டது. ஒருசிலருக்கு மண்டை உடைந்தது. வண்ணாரப்பேட்டை தடியடியைக் கண்டித்து மாநிலம் முழுவதும் போராட்டம் தீவிரமானது. இதனால் வண்ணாரப்பேட்டை காவல்நிலையத்துக்கு சென்னை கமிஷனர் விஸ்வநாதன் வந்து விசாரணை நடத்தினார்.
பின்னர், ஜமாத் தலைவர்களை காவல்நிலையம் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதைெதாடர்ந்து கைது செய்யப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்படுவதாக கமிஷனர் அறிவித்தார். ஆனாலும் அந்த பகுதியில் போராட்டம் கைவிடப்படவில்லை. அதேபோல் அன்று இரவு நெல்லை, நாகை, மதுரை, சேலம், தர்மபுரி உள்பட தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்களும் போலீசார் தடியடி நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்தனர். இந்தநிலையில் போலீசார் தடியடி நடத்திய வீடியோ நேற்று சமூகவலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதேநேரம் நேற்று 2வது நாளாக திருச்சி, நாகை, அறந்தாங்கி, சேலம், மதுரை உள்பட மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டம் பல்வேறு இடங்களில் 3வது நாளாக இன்றும் நீடித்து வருகிறது. போலீசார் தடியடி நடத்திய வண்ணாரப்பேட்டையில் இன்று 3வது நாளாக தர்ணாவை தொடர்ந்து வருகின்றனர். நேற்றிரவு போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் தங்களது செல்போனில் டார்ச்சை ஒளிரவிட்டபடி எதிர்ப்பை தெரிவித்தனர். இதனால், போராட்டக் களம் இரவிலும் பகலை போல காட்சியளித்தது. இதேபோல், இன்று சென்னை மண்ணடி, மதுரை உள்ளிட்ட இடங்களிலும் போராட்டம் தொடர்கிறது. திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை புதுத்தெரு திடலில் அனைத்து ஜமாத் மற்றும் அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் நேற்று மாலை முதல் தொடர் காத்திருப்பு போராட்டம் துவங்கியது.
போராட்டத்திற்கு குடியுரிமை திருத்தச்சட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு தலைவர் ஜெர்மன் அலி தலைமை வகித்துள்ளார். போராட்டத்தை ஒருங்கிணைப்பாளர்கள் கருத்தப்பா சித்திக், அன்சாரி, வக்கீல் தீன்முகமது, அபுபக்கர் சித்திக் ஆகியோர் வழிநடத்தி வருகின்றனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமிய ஆண்கள், பெண்கள், குழந்தைகளுடன் அமர்ந்து தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முத்துப்பேட்டை டிஎஸ்பி இனிகோ திவ்யன் உள்ளிட்ட போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாததால் போராட்டம் விடிய விடிய தொடர்ந்தது. இன்றும் 2வது நாளாக போராட்டம் நடந்து வருகிறது. முத்துப்பேட்டை இஸ்லாமியர்களுக்கும், இந்துக்களுக்கும் அடிக்கடி மோதல் ஏற்படும் பகுதியாகும்.
இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது. எஸ்பி துரை, டிஎஸ்பி இனிகோ திவ்யன் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் கூத்தாநல்லூர் காவல் நிலையம் அருகில் உள்ள தனியார் இடத்தில் நேற்று மாலை முதல் இஸ்லாமியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் பெண்கள் உள்பட 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். 2வது நாளாக இன்றும் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. நேற்று இரவு தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கலந்து கொண்டு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பேசினார். திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் தமுமுக சார்பில் நேற்று மதியம் காத்திருப்பு போராட்டம் துவங்கியது. இன்று இந்த போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
மதுரை மகபூபாளையத்தில் உள்ள ரயில் நிலையம் அருகில் இன்று சாலை மறியல் நடந்தது. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில துணை தலைவர் அப்துல் ரகுமான் தலைமையில் ஏராளமானோர் எஸ்பி அலுவலகம் முன் போராட்டம் நடத்த திரண்டு வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இந்தநிலையில் போராட்டத்தை கண்காணிக்க 6 சிறப்பு போலீஸ் அதிகாரிகளை நியமித்து டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார். அதன்படி மதுரைக்கு அபய் குமார் சிங், நெல்லை மாநகருக்கு மகேஷ்குமார் அகர்வால், புறநகருக்கு முருகன், போடி, கம்பம், தேனி ஆகிய இடங்களுக்கு பாஸ்கரன், திண்டுக்கல், பழனி, ஒட்டன்சத்திரம் ஆகிய இடங்களுக்கு ஸ்டாலின் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த அதிகாரிகளை ஒருங்கிணைத்து சட்டம்,ஒழுங்கு ஏடிஜிபி செயல்படுவார் என்றும் அந்த உத்தரவில் டிஜிபி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் 3வது நாளாக இன்றும் தமிழகம் முழுவதும் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை போலீஸ் உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வரின் வீட்டில் நடந்த இந்த ஆலோசனையில், டிஜிபி திரிபாதி, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் போராட்டத்தை கட்டுப்படுத்த என்ன செய்வது என்பது பற்றி அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை 1 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. போராட்டத்தை கட்டுப்படுத்த இதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.