பைக் மீது லாரி மோதியதில் கர்ப்பிணி பெண் பரிதாப சாவு வெளியே வந்த சிசுவும் உயிரிழப்பு... தெலங்கானாவில் உருக்கம்
2/13/2020 5:12:47 PM
காளஹஸ்தி: உடல் பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு சென்றுவிட்டு திரும்பும்போது பைக் மீது லாரி மோதியதில் கர்ப்பிணி பரிதாபமாக இறந்தார். அவரது வயிற்றில் இருந்த சிசுவும் உயிரிழந்தது.தெலங்கானா மாநிலம், கம்மம் மாவட்டம், ராமச்சந்திரராவ் பஞ்சாரா பகுதியை சேர்ந்தவர் முரளி(38). இவரது மனைவி சுஜாதா(32). இவர் 8 மாத கர்ப்பமாக இருந்தார். மனைவிக்கு உடல் பரிசோதனை செய்வதற்காக நேற்று பைக்கில் பெனுபல்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு மருத்துவ பரிசோதனை முடித்துவிட்டு அங்கிருந்து இரவில் பைக்கில் வீடு திரும்பினர்.
பெனுவல்லி கிராம எல்லையில் வரும்போது எதிரே வந்த லாரி, அவர்களது பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சுஜாதா உடல் நசுங்கி அந்த இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவரது வயிற்றில் இருந்த சிசு சுமார் 10 மீட்டர் தூரத்தில் தூக்கி வீசப்பட்டு அதுவும் உயிரிழந்தது. காயத்துடன் தப்பிய முரளி, மனைவி மற்றும் சிசுவின் நிலைமை பார்த்து கதறி துடித்தார். இதனால் அக்கம்பக்கத்தினர் வந்து முரளியை மீட்டு ஆறுதல் கூறினர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் பெனுபல்லி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சுஜாதா, சிசு சடலங்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.