அமமுக புதிய நிர்வாகிகள் நியமனம்: டிடிவி.தினகரன் அறிவிப்பு
2/13/2020 5:10:10 PM
சென்னை: அமமுகவில் புதிய நிர்வாகிகளை அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் நியமித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பு:நீலகிரி மற்றும் ஒருங்கிணைந்த கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களின் பொறுப்பாளர்களாக சி.சண்முகவேலு (முன்னாள் அமைச்சர்), ஆர்.துரைசாமி (எ) சேலஞ்சர் துரை இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள். அமமுக அமைப்பு செயலாளர் பொறுப்பில் சி.சண்முகவேலு நியமிக்கப்படுகிறார். இதேபோல், கோவை மாநகர் வடக்கு, கோவை மாநகர் தெற்கு, கோவை புறநகர் என கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட கழக பணிகளை விரைந்து ஆற்றுவதற்கு ஏதுவாக இன்று முதல் கழக அமைப்பு ரீதியாக கோவை கிழக்கு மாவட்டம், கோவை மேற்கு மேற்கு மாவட்டம், கோவை மத்திய மாவட்டம், கோவை வடக்கு மாவட்டம் மற்றும் கோவை தெற்கு மாவட்டம் என ஐந்து மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
கோவை கிழக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் மா.ப.ரோகிணி(எ)கிருஷ்ணகுமார் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்), கோவை மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் சேலஞ்சர் துரை (அமைப்பு செயலாளர்), கோவை மத்திய மாவட்ட செயலாளர் பொறுப்பில் என்.ஆர்.அப்பாதுரை, கோவை வடக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் ஜி.அலாவுதீன், கோவை தெற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் சுகுமார்(முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்) இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள். கோவை மத்திய மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள என்.ஆர்.அப்பாதுரை அமைப்பு செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.