அம்பத்தூரில் பரபரப்பு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 66 வயது முதியவர் கைது
2/13/2020 3:57:16 PM
அம்பத்தூர்: அம்பத்தூர் அடுத்த பட்டரைவாக்கம், கண்ணன் கோயில் தெருவில் ஒரு தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களது 9 வயதில் மகள், அதே பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வருகிறாள். கடந்த 4ம் தேதி இரவு வீட்டுக்கு வெளியே விளையாடி கொண்டிருந்தாள். அதே பகுதியில் வசிக்கும் தேவேந்திரன் (66) என்பவர், சிறுமிக்கு சாக்லெட் கொடுத்து நைசாக பேசி வீட்டுக்குள் அழைத்து சென்று பாலியல் தொல்லை செய்துள்ளார். மேலும், இதனை யாரிடமும் கூற கூடாது என சிறுமியை மிரட்டி அனுப்பியுள்ளார். அதன் பிறகு, வீட்டை விட்டு வெளியே வந்த சிறுமி, பயந்துபோய் தனது பெற்றோரிடம் கூறாமல் இருந்துள்ளார். நேற்று முன்தினம் சிறுமிக்கு மீண்டும் தேவேந்திரன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதுகுறித்து, பெற்றோரிடம் கூறி சிறுமி அழுதுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர், அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் ரமணி தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிமியிடம் விசாரணை நடத்தினர். இதில், தேவேந்திரன் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. தலைமறைவான தேவேந்திரனை நேற்று கைது செய்தனர். பின்னர், போலீசார் அவரை அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அம்பத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.