வீட்டில் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த விவசாயி வெட்டிக் கொலை; மனைவிக்கும் சரமாரி வெட்டு: தம்பி மனைவி வெறிச்செயல்
2/13/2020 3:55:28 PM
ஆம்பூர்: வீட்டில் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த விவசாயியை வெட்டிக்கொலை செய்ததுடன் அவரது மனைவியை சரமாரி வெட்டிய தம்பி மனைவி கைது செய்யப்பட்டார்.திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கம்மகிருஷ்ணபள்ளி பகுதியை சேர்ந்தவர்கள் முருகேசன் (50), வெங்கடேசன் (45). இதில் முருகேசன், அவரது மனைவி விஜயா ஆகியோர் அதே பகுதியில் உள்ள தங்களுக்கு சொந்தமான நிலத்தில் வீடுகட்டி வசிக்கின்றனர். வெங்கடேசன், அவரது மனைவி சித்ரா (40) ஆகியோர் கம்மகிருஷ்ணபள்ளியில் வசித்துவருகின்றனர். இந்த நிலையில், ஒன்றரை ஆண்டுக்கு முன் வெங்கடேசன் இறந்துவிட்டதால் சித்ராவுக்கும் முருகேசன் குடும்பத்தினருக்கும் இடையே நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனிடையே சில மாதங்களுக்கு முன்பு சித்ராவின் மகனும் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.
இதனால் வேதனை அடைந்த சித்ரா, ‘முருகேசன் மற்றும் அவரது குடும்பத்தினர்தான் சூனியம் வைத்து தொடர்ந்து தொல்லை கொடுத்து வருவதாகவும், அவர்கள் வைத்த சூனியத்தால்தான் எனது மகன் இறந்துவிட்டான்’ எனக்கூறி அடிக்கடி முருகேசன் குடும்பத்தினரிடம் தகராறு செய்துள்ளார். நேற்றிரவு முருகேசன் மற்றும் விஜயா இருவரும் தங்களது வீட்டின் முன்பகுதியில் உள்ள தாழ்வாரத்தில் தூங்கிக்கொண்டிருந்தனர். நள்ளிரவு 12 மணியளவில் சித்ரா, முருகேசன் வீட்டிற்கு சென்று முருகேசனை சரமாரியாக வெட்டியதில் முருகேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்த விஜயாவையும் கத்தியால் சரமாரி வெட்டியுள்ளார். அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்ததால் சித்ரா அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
முருகேசன் சடலமாக கிடப்பதையும், விஜயா உயிருக்கு போராடி கொண்டிருப்பதையும் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.இதுகுறித்து தகவல் அறிந்ததும் உமராபாத் போலீசார் சென்று விஜயாவை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முருகேசனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து சித்ராவை தேடி வந்தனர். அப்போது அப்பகுதியில் பதுங்கியிருந்த சித்ராவை கைது செய்து அவரிடம் இருந்து கத்தியை பறிமுதல் செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.