2 சிறுமிகளுக்கு பாலியல் டார்ச்சர் பெரிசு மீது பாய்ந்தது குண்டாஸ்
2/13/2020 3:54:35 PM
கோவில்பட்டி: கோவில்பட்டியில் 2 சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தெற்கு புதுக்கிராமம் நாராயணகுரு நகரை சேர்ந்தவர் பரமேஸ்வரன்(63). இவர் அப்பகுதியில் கடந்த மாதம் 16ம் தேதி தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 2 சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமிகளின் பெற்றோர் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து பரமேஸ்வரனை கைது செய்தனர். மேலும் போக்சோ சட்டத்தின்கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்தநிலையில் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க மாவட்ட எஸ்பி. அருண் பாலகோபாலன் பரிந்துரையின்படி, பரமேஸ்வரனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் சந்தீப்நந்தூரி உத்தரவிட்டார். இதையடுத்து குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கான ஆணையை கோவில்பட்டி டிஎஸ்பி ஜெபராஜ் மேற்பார்வையில், அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பத்மாவதி பாளை மத்திய சிறையில் வழங்கினார். இதையடுத்து குண்டர்சட்டத்தில் பரமேஸ்வரன் அடைக்கப்பட்டார்.
சிறுமியை பலாத்காரம்: வாலிபருக்கு போக்சோ
கேரள மாநிலத்தை சேர்ந்தவர் கலாதரன் (39). இவருக்கு மனைவி, குழந்தை உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன் குடும்பத்துடன் திருப்பூர் வந்த கலாதரன் பூலுவப்பட்டி பகுதியில் தங்கி பின்னலாடை நிறுவனத்தில் வேலை செய்தார். குடும்ப பிரச்னை காரணமாக கலாதரனின் மனைவி குழந்தையுடன் கேரளாவுக்கு சென்றார்.
இந்தநிலையில் வீட்டுக்கு அருகே வசிக்கும் 17 வயது சிறுமி ஒருவருடன் கலாதரனுக்கு பழக்கம் ஏற்பட்டு அவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி, சிறுமியை வெளியூர் கடத்தி சென்றுள்ளார். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்படி, திருப்பூர் அனைத்து மகளிர் வடக்கு போலீசார் விசாரணை நடத்தியதில், சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து போக்சோ சட்டத்தில் கலாதரன் கைது செய்யப்பட்டார்.