தங்க புதையலை கண்டுபிடிக்கும் தங்க புதையலை கண்டுபிடிக்கும்: காஞ்சி.யை சேர்ந்தவர் உள்பட 8 பேர் கைது
2/12/2025 4:40:24 PM
சித்தூர்: தங்க புதையலை கண்டுபிடிக்கும் அட்சயபாத்திரம் என்று கூறி வாலிபரிடம் ₹2.10 கோடி மோசடி செய்த 8 பேர் கைது செய்யப்பட்டனர். திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் நவீன்குமார். இவரிடம் கர்நாடகாவை சேர்ந்த கங்காதர் உள்பட 9 பேர் கும்பல், தங்களிடம் அட்சயபாத்திரம் இருப்பதாகவும் இது பூமிக்கு அடியில் இருக்கும் தங்க புதையல்களை கண்டுபிடித்து விடும் என கூறியுள்ளனர். இதை நம்பிய நவீன்குமார் சித்தூர் அடுத்த குடிபல்லி மண்டலத்துக்கு சென்றபோது அங்கு அவரிடம் அட்சய பாத்திரம் என்று கூறி ஒரு பாக்சை கொடுத்துவிட்டு அந்த கும்பல் ரூ.2 கோடியே 10 லட்சத்தை வாங்கிக்கொண்டு சென்றுவிட்டனர். இதையடுத்து அந்த அட்சய பாத்திரத்தை எடுத்துக்கொண்டு தங்க புதையல் இருக்கும் இடத்தை தேடி உள்ளார்.
ஆனால் அவ்வாறு எதுவும் தெரியவில்லை. அந்த பாக்சை திறந்து பார்த்தபோது பேட்டரியால் இயங்கும் மின்விளக்குகளை பொருத்தி ஏமாற்றியது தெரியவந்தது. இதுகுறித்து நவீன்குமார் குடிபல்லி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். குடிபல்லி ரயில் நிலையம் அருகே போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டபோது 2 கார்கள் மற்றும் பைக்கை போலீசார் தடுத்து நிறுத்தினர். போலீசாரை பார்த்தவுடன் காரில் வந்தவர்கள் காரை நிறுத்தி விட்டு தப்பி ஓடினர். அவர்களை போலீசார் விரட்டிச்சென்று 8 பேரை பிடித்தனர். விசாரணையில் அவர்கள் அட்சய பாத்திரம் மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்தவர்கள் என தெரியவந்தது. அவர்கள் கர்நாடக மாநிலம், பங்காருபேட்டையைச் சேர்ந்த மகாதேவா(42), சிக்பல்லாபூர் பகுதியை சேர்ந்த கங்காதர்(30),
கிருஷ்ணகிரி மாவட்டம் கொத்தூர் கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரா(40), கர்நாடக மாநிலம், பங்காருபேட்டை அடுத்த காமசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த சிவகுமார்(19), சித்தூர் மாவட்டம் கொத்தபல்லி கிராமத்தை சேர்ந்த சீனப்பா(35), பெங்களூரு மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த தனசேகர்(35), காஞ்சிபுரம் மாவட்டம், ராஜகுளம் கிராமத்தை சேர்ந்த விநாயகம்(35), கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனபல்லியை சேர்ந்த சேகர்(28) என்பது தெரியவந்தது. மகாதேவாவிடமிருந்து ரூ.8 லட்சத்து 95 ஆயிரம், கங்காதரிடமிருந்து ரூ.10 லட்சம், ராமச்சந்திராவிடமிருந்து ரூ.50 ஆயிரம், சிவகுமாரிடமிருந்து ரூ.10 லட்சம், பூமிக்கு அடியில் பதுக்கி வைத்த பணம் உட்பட ரூ.1 கோடியே 29 லட்சத்து 35 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். ரூ.18 லட்சம் மதிப்புள்ள ஒரு கார், ரூ.2 லட்சம் மதிப்புள்ள மற்றொரு கார், ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள இருசக்கர வாகனம் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டது.
இவர்களிடம் விசாரணை செய்ததில் மற்றொரு நபரும் இந்த வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக உள்ளார். இவர் வேலூரை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. எனவே, 3 தனிப்படை அமைத்து போலீசார் வேலூர் பகுதியில் தலைமறைவாக இருப்பவரை தேடி வருகின்றனர்.