கொரோனா வைரஸ் பலி 908 ஆக அதிகரிப்பு
2/10/2025 3:37:59 PM
பீஜிங்: கொரோனா வைரசிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 908 ஆக அதிகரித்துள்ளதாக சீனா தகவல் தெரிவித்துள்ளது. மேலும் 40,000 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகர் வுகானில் இருந்து கடந்த டிசம்பர் மாத இறுதியில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. 28க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் பரவி உள்ளது. இதனால் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக, சீனாவில் மிகப்பெரிய பாதிப்பை கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால் மருத்துவமனைகளில் நோயாளிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
இதையடுத்து, ஹுபெய் பகுதியில் மட்டுமே நேற்று ஒரே நாளில் 80க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்துள்ளனர். இதனால், கொரோனா வைரஸ் தாக்கியதில் பலியானவர்களின் எண்ணிக்கை 908 ஆக உயர்ந்துள்ளதாக மாகாண சுகாதார ஆணையம் அறிவித்துள்ளது. சீனா முழுவதும் இந்த வைரஸ் காய்ச்சலுக்கு 3062 பேர் பாதிப்படைந்து உள்ளனர். கொரோனா வைரஸ் மேலும் 40,000 பேரிடம் பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ள சீனாவிற்கு உதவ இந்தியா தயாராக இருப்பதாக இந்திய பிரதமர் மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு கடிதம் எழுதி உள்ளார். இதில் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களுக்கு தனது இரங்கலையும் மோடி தெரிவித்துக் கொண்டுள்ளார்.
ஹுபெய் பகுதியில் இருந்து இந்தியர்களை வெளியேற்ற தேவையான ஏற்பாடுகளை செய்து தருவதாக சீனாவிற்கு மோடி நன்றி தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், சர்ஜிக்கல் மாஸ்க் மற்றும் கையுறைகள் ஆகியவற்றை ஏற்றுமதிக்கு தடை செய்யப்பட்ட பொருட்களின் பட்டியலில் இருந்து நீக்கி உள்ளதாகவும் மோடி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.