ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தை தேரோட்டம் கோலாகலம்
2/7/2025 2:28:36 PM
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தைத்தேரோட்டம் இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர். திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பூபதி திருநாள் எனப்படும் தைத்தேர் திருவிழா கடந்த 30ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 4ம் நாளான கடந்த 2ம் தேதி தங்க கருட வாகனத்தில் நம்பெருமாள் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 8ம் நாளான நேற்று மாலை தங்க குதிரை வாகனத்தில் நம்பெருமாள் புறப்பட்டு உத்திரவீதிகளில் வலம் வந்து வையாளி கண்டருளுளினார்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது. இதையொட்டி நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் அதிகாலை 4.30 மணிக்கு கண்ணாடி அறையில் இருந்து புறப்பட்டு தைத்தேர் மண்டபத்திற்கு அதிகாலை 5.15 மணிக்கு வந்தார். 5.15 மணி முதல் 5.45 மணி வரை ரதரோஹணம்(தனுர் லக்னத்தில்) நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் எழுந்தருளினார். காலை 6 மணிக்கு பக்தர்கள் ரங்கா, ரங்கா என்ற கோஷத்துடன் வடம் பிடித்து தேர் இழுத்தனர். தேர் நான்கு உத்திர வீதிகள் வழியாக வலம் வந்து, நிலையை வந்தடைந்தது. தேர் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
10ம் திருநாளான நாளை சப்தாவரணம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நிறைவு நாளான 9ம் தேதி(ஞாயிற்று கிழமை) மாலை 3 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு மாலை 3.30 மணிக்கு ரெங்கவிலாச மண்டபம் வருகிறார். அங்கிருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு இரவு 7.30 மணிக்கு வாகன மண்டபம் சென்றடைகிறார். வாகன மண்டபத்தில் இருந்து இரவு 8 மணிக்கு நம்பெருமாள் ஆளும்பல்லக்கில் புறப்பட்டு நான்கு உத்திர வீதிகளில் வலம் வந்து இரவு 9 மணிக்கு வாகன மண்டபம் வந்தடைகிறார். பின்னர் அங்கிருந்து இரவு 9.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானம் சென்றடைவதோடு தைத்தேர் திருவிழா நிறைவடைகிறது.