கர்நாடக மாநில அமைச்சரவை 2-ம் கட்டமாக விஸ்தரிப்பு: அணி மாறிய 10 பேருக்கு அமைச்சர் பதவி
2/6/2025 3:33:54 PM
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் எடியூரப்பா தலைமையிலான பாஜ அரசின் 2வது கட்ட அமைச்சரவை விஸ்தரிப்பு இன்று காலை நடந்தது. 10 பேருக்கு ஆளுநர் வி.ஆர்.வாலா பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.முதல்வர் எடியூரப்பா தலைமையிலான ஆட்சியை பாதுகாத்துக்கொள்ள மஜத-காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 17 எம்.எல்.ஏ.க்களை ஆபரேஷன் தாமரை திட்டத்தின் கீழ் ராஜினாமா செய்தனர். பின்னர் 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்றது. இதில் பாஜ சார்பில் போட்டியிட்ட 12 பேர் ெவற்றி பெற்றனர்.
இவர்கள் அனைவருக்கும் அமைச்சர் பதவி அளிக்கவேண்டும் என ேகாரிக்கை எழுந்தது. ஆனால், இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 9 பேர் உட்பட மொத்தம் 13 பேர்களுக்கு அமைச்சர் பதவி அளிக்கப்படும் என ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டது. இறுதியாக ஆட்சி அமைக்க காரணமாக இருந்த 10 எம்எல்ஏக்களை மட்டும் அமைச்சரவையில் சேர்த்து கொள்ள முடிவு செய்த எடியூரப்பா, இது தொடர்பாக பாஜ தலைமையிடம் அனுமதி பெற்றார். அதை தொடர்ந்து இன்று காலை 10.30 மணிக்கு பெங்களூரு ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடந்தது. இதில் ரமேஷ் ஜார்கிஹோளி (கோகாக்), எஸ்.டி. சோமசேகர் (யஸ்வந்தபுரம்), கோபாலய்யா (மகாலட்சுமி லேஅவுட்), பைரதி பசவராஜ் (கே.ஆர். புரம்), டாக்டர் கே. சுதாகர் (சிக்கபள்ளாப்பூர்), பி.சி. பாட்டீல் (ஹிரேகெரூர்), நாராயணகவுடா (கே.ஆர். பேட்டை),
மந்த் பாட்டீல் (காகவாடா), சிவராம் ஹெப்பார் (எல்லாபுரா) மற்றும் ஆனந்த் சிங் (விஜயநகர்) ஆகியோருக்கு பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.இவ்விழாவில் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா, மத்திய, மாநில அமைச்சர்கள், மாநில தலைமை செயலாளர் டி.எம்.விஜயபாஸ்கர், மாநில காவல்துறை தலைவர் பிரவீண்சூட், பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ் உள்பட அரசு அதிகாரிகள், புதியதாக பதவியேற்ற அமைச்சர்களின் குடும்பத்தினர், ஆதரவாளர்கள், பாஜ தொண்டர்கள் கலந்துகொண்டனர். பதவியேற்பு விழா காரணமாக ஆளுநர் மாளிகை வளாகம் பாஜ தொண்டர்களால் நிறைந்திருந்தது. அமைச்சர்கள் பதவியேற்றப்போது, அவர்களது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.