யானைகள் புத்துணர்வு முகாம் துவக்கம்: பழங்குடியின சிறுவனை அழைத்து செருப்பை கழற்ற வைத்த அமைச்சர்
2/6/2025 2:39:55 PM
ஊட்டி: முதுமலை தெப்பகாட்டில் வனத்துைற கட்டுபாட்டில் உள்ள வளர்ப்பு யானைகளுக்கான புத்துணர்வு சிறப்பு நலவாழ்வு முகாம் இன்று துவங்கியது. இம்முகாமினை துவக்கி வைத்த தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பழங்குடியின சிறுவனை அழைத்து தனது செருப்பை கழற்றச் சொன்னதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் கோவில் யானைகளுக்கான நலவாழ்வு முகாம் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகேயுள்ள தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் நடத்தப்பட்டு வருகிறது. அதே சமயம் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள டாப்சிலிப், முதுமலை தெப்பகாடு வளர்ப்பு யானைகள் முகாமில் உள்ள யானைகளுக்கு அந்தந்த முகாம்களிலேயே நலவாழ்வு முகாம் நடத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில், முதுமலை தெப்பகாட்டில் உள்ள 2 குட்டி யானைகள் உட்பட 27 வளர்ப்பு யானைகளுக்கான நலவாழ்வு முகாம் இன்று துவங்கியது. இதையொட்டி வளர்ப்பு யானைகள் அனைத்தும் குளிக்க வைக்கப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டன. முகாமினை தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் துவக்கி வைத்தார். நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் கிருஷ்ணகுமார் கவுசல் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
48 நாட்கள் நடைபெறும் இம்முகாமில் யானைகளுக்கு கரும்புகள் மற்றும் பழவகைகள், ராகி, பாசிபயறு, சவனபிராசம், அஸ்தசூரணம், புரோட்டின் பவுடர்கள், மினரல்ஸ், வைட்டமின் பவுடர்கள், மஞ்சள்தூள், வெல்லம் உள்ளிட்டவைகள் வழங்கப்பட உள்ளன. மேலும் யானைகள் எடைக்கேற்ப நடைபயிற்சி அளிக்கப்பட உள்ளன. இன்று துவங்கிய யானைகள் புத்துணர்வு முகாம், வரும் மார்ச் மாதம் 24ம் தேதி வரை தொடர்ந்து 48 நாட்கள் நடக்கிறது. நாள்தோறும் யானை ஒன்றுக்கு தலா 150 கிலோ பசுந்தீவனமும் வழங்கப்பட உள்ளன. மேலும் தினமும் மாலை நேரத்தில், யானைகளுக்கு நடைபயிற்சியும் அளிக்கப்படுகிறது, முகாம் துவங்கி உள்ள நிலையில் சுற்றுலா பயணிகளுக்கான யானை சவாரி ரத்து செய்யப்பட்டுள்ளது.
பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட டாப்சிலிப்(உலாந்தி) வனசரகத்தில் கோழிக்கமுத்தி, சின்னார் என 2 யானைகள் முகாம்கள் உள்ளன. இதில், கோழிக்கமுத்தி முகாமில் மட்டும் இரண்டு குட்டி யானைகள் உள்பட மொத்தம் 27 யானைகள், வளர்ப்பு யானைகளாக வனத்துறை மூலம் பராமரிக்கப்படுகிறது. இங்குள்ள யானைகளுக்கு கோழிக்கமுத்தி முகாமில் இன்று நலவாழ்வு முகாம் துவங்கியது.
விழாவில் சலசலப்பு
யானைகள் புத்துணர்வு முகாம் துவக்க விழாவின் போது, அங்குள்ள கோயிலில் சிறப்பு பூஜைக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது, அங்கு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உட்பட விஐபி.,க்கள் கூடியிருந்தனர். இதனை காண பழங்குடியின சிறுவர்கள் சிலர் சற்று தொலைவில் நின்று கொண்டிருந்தனர். அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அந்த சிறுவர்களை அழைத்து ‘டேய் பசங்களா செருப்பை கழட்டுங்கடா’ என தனது காலை காட்டினார். சிறுவர்களும் அமைச்சரின் காலில் இருந்த செருப்பை கழற்றி விட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.