அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணி: மலர் வளையம் வைத்து அஞ்சலி
2/3/2025 2:46:59 PM
சென்னை: அறிஞர் அண்ணாவின் 51வது நினைவு தினத்தை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான திமுகவினர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பேரணியாக வந்து மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.அறிஞர் அண்ணாவின் 51வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, திமுக சார்பில் அமைதி பேரணி நடைபெற்றது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணி, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் இருந்து இன்று காலை தொடங்கி மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தை சென்றடைந்தது.
முன்னதாக, அண்ணா நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பேரணியாக வந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது திமுக பொருளாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் கே.என்.நேரு, இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், துணை பொதுச் செயலாளர் வி.பி.துரைசாமி, மாவட்ட செயலாளர்கள் சேகர் பாபு, ஜெ.அன்பழகன், மா.சுப்பிரமணியன், மாதவரம் சுதர்சனம், சட்டமன்ற உறுப்பினர்கள் தாயகம் கவி, ரவிச்சந்திரன், ரங்கநாதன் உள்ளிட்ட திமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் பேரணியாக வந்து அண்ணா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். இதை தொடர்ந்து, அண்ணா நினைவிடம் அருகே உள்ள தலைவர் கலைஞர் நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
டிஎன்பிஎஸ்சி அலுவலகம் நாளை முற்றுகை
இந்த பேரணியை தொடர்ந்து, திமுக இளைஞர் அணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘டிஎன்பிஎஸ்சி முறைகேட்டை கண்டித்து நாளை டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. டிஎன்பிஎஸ்சி முறைகேடு தொடர்பாக நியாயமான முறையில் விசாரணை நடைபெற வேண்டும். சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டால் மட்டுமே நியாயமான முறையில் விசாரணை நடைபெறும்’’ என்றார்.
அண்ணா விரும்பிய தமிழகம்அமைக்க சபதம் ஏற்போம்: மு.க.ஸ்டாலின் முகநூல் பதிவு
சென்னை: அண்ணா விரும்பிய தமிழகம் அமைக்க சபதம் ஏற்போம் என்று மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பதிவில் கூறியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தனது முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது:அரசியல் அறத்தை போதித்த காஞ்சி தந்த வள்ளுவன். கொள்கை உரத்தை ஊட்டிய இந்நூற்றாண்டின் தலைவன். பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 51வது நினைவு நாள் இன்று. அவரை மறந்தால் அல்லவா நினைப்பதற்கு?. அவரது குரலும், கொள்கையும், கோட்பாடும் வாழ்க்கையும், வாழ்த்தும் என்றும் நம்மை இயக்கிக் கொண்டு இருக்கிறது. அண்ணா விரும்பிய தமிழகம் அமைக்க சபதம் ஏற்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.