ஆன்லைன் வர்த்தகம், பிட்காயின் முதலீடு மூலம் இருமடங்கு பணம் தருவதாக ₹3 ஆயிரம் கோடி மோசடி
1/28/2020 2:40:38 PM
ஈரோடு: ஆன்லைன் வர்த்தகம், பிட்காயின் ஆகியவற்றில் முதலீடு செய்தால், இருமடங்காக பணம் தருவதாக கூறி தமிழகம் முழுவதும் ரூ.3 ஆயிரம் கோடி மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஈரோடு மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர். சேலம் மாவட்டம் ஆரியபாளையம் கிழக்கு தெருவை சேர்ந்த சசிகுமார் (35). இவரும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், ஏஜெண்டுகள் நேற்று அகில பாரத இந்து மகாசபாவின் மாநில தலைவர் கல்கி ராஜசேகரன் தலைமையில் ஈரோடு மாவட்ட எஸ்.பி.அலுவலகத்தில் பிட்காயின் மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் மனு அளித்தனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட சசிகுமார் கூறியதாவது: எனது குடும்ப கஷ்டத்தின் காரணமாக பணம் சம்பாதிப்பதற்காக பல வழிகளை தேடியபோது எனது நண்பர் மூலமாக மல்லியக்கரையைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவர் அறிமுகமானார். அவர் ஆன்லைனில் ஒரு தொழில் உள்ளது. அதில் முதலீடு செய்தால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என கூறினார். இதனால் கடந்த 2018ம் ஆண்டு ஸ்மார்ட் என்ற நிறுவனத்தில் முதலீடு செய்வது குறித்து விளக்கமளித்தனர். அப்போது பன்னீர்செல்வம் கோபிசெட்டிப்பாளையத்தை சேர்ந்த சுபாஷ்சாமிநாதன் மற்றும் ராமதுரை ஆகியோர் பெரிய தொழிலதிபர்கள். தனது மாமியார் மரியசெல்வம் மூலமாக பல ஆயிரம் பேரை சேர்த்து ஆன்லைன் மூலமாக பணம் பெற்று வருவதாக பன்னீர்செல்வம் கூறினார்.
இதை நம்பி எனக்கு தெரிந்த நண்பர்களையும் சேர்த்து ரூ.12 லட்சம் சேலத்தில் வைத்து அவரிடம் கொடுத்தேன். மேலும் அங்கிருந்தவர்கள் சுபாஷ் சாமிநாதனுக்கு சொந்தமாக வெளிநாடுகளில் கே.ஏ.எஸ். குரூப் ஆப் கம்பெனி உள்ளது. அதில் முதலீடு செய்து உங்களுக்கு அதிக பணம் தருவோம் என்று கூறினார்கள்.
இதனை தொடர்ந்து நான் ஆயிரத்து 200 பேரை சேர்த்து ரூ.7 கோடி பணத்தை பன்னீர்செல்வத்திடம் கொடுத்தேன். இது தொடர்பாக பல மாவட்டங்களில் மீட்டிங் நடத்தினர். பின்னர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் மீட்டிங்கிற்கு ஈரோடு வருமாறு அழைத்தனர். இதை நம்பி வந்தபோது மீட்டிங் கேன்சல் ஆகி விட்டது எனக்கூறினர். ஆனால் நான் பணம் வாங்கி கொடுத்தவர்களுக்கு உரிய பணத்தை அவர்கள் தரவில்லை. இதுபற்றி பன்னீர்செல்வத்திடம் கேட்டபோது முறையாக பதில் அளிக்கவில்லை. மேலும் இதுதொடர்பாக போன் செய்தால் கொலை செய்து விடுவதாக அந்த கும்பல் மிரட்டியது.
ஆசை வார்த்தை கூறி ஆன்லைன் வர்த்தகம், பிட்காயின், மைனிங் மூலமாக ஏமாற்றியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
மேலும் புகார் அளிக்க வந்த ஏஜெண்டுகள் கூறியதாவது: தமிழகத்தில் பல மாவட்டங்களில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏஜெண்டுகள் செயல்பட்டு வந்தோம். நாங்கள் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோரிடம் பணம் வசூல் செய்து கொடுத்தோம். இதுவரை ரூ.3 ஆயிரம் கோடி அளவிற்கு மோசடி செய்துள்ளனர். பணத்தை திருப்பி கேட்டால் எங்களுக்கு கொலைமிரட்டல் விடுக்கிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.