ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு: 5 மாவட்டங்களில் திமுக ஆர்ப்பாட்டம்
1/28/2020 2:29:20 PM
திருவாரூர்: ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக தஞ்சை, நாகை, திருவாரூர், புதுகை, கடலூர் ஆகிய காவிரி டெல்டா மாவட்டங்களில் இன்று திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் எம்பி, எம்எல்ஏக்கள் உள்ளிட்ட திமுகவினர், விவசாயிகள், மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர். காவிரிப் படுகையை 2 மண்டலங்களாகப் பிரித்து மொத்தம் 274 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு கடந்த ஆண்டு அனுமதி அளித்தது. பிரிவு 1ல் விழுப்புரம், புதுச்சேரியைச் சுற்றியுள்ள பகுதிகளில் 116 ஹைட்ரோ கார்பன் கிணறுகள், பிரிவு 2ல் கடலூர் முதல் நாகை வரையுள்ள பகுதிகளில் 158 கிணறுகள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதற்காக வேதாந்தா மற்றும் ஓஎன்ஜிசி நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி இருந்தது. ஹைட்ரோ கார்பன் எடுக்க விவசாய நிலங்களை கையகப்படுத்தும் பணியில் மத்திய அரசு இறங்கியது. இதற்கு விவசாயிகள், பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. திட்டத்திற்கு எதிராகவும், திட்டத்தை கைவிட கோரியும் விவசாயிகள், பொதுமக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர். இதற்கு ஆதரவாக மாணவர்கள், பல்வேறு அமைப்பினர், அரசியல் கட்சியினரும் போராட்டத்தில் குதித்தனர். போராட்டம் விஸ்வரூபம் எடுத்ததை தொடர்ந்து ஹைட்ேரா கார்பன் எடுப்பதற்கான பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
கடந்த நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட தமிழக அமைச்சர்கள் டெல்டாவில், ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதிக்க மாட்டோம் என்று கூறினர். ஆனால், ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்காக 5வது ஏலத்திற்கான அறிவிப்பு கடந்த 15ம் தேதி வெளியிடப்பட்டது. இதற்காக வரும் மார்ச் 18ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 19,789 சதுர கிமீ பரப்பளவில் 11 ஹைட்ரோ கார்பன் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான உரிமங்கள் இந்த 5வது ஏலத்தில் வழங்கப்பட உள்ளன. இவற்றில் 4,064.22 சதுர கிமீ பரப்பளவு உள்ள ஒரு ஹைட்ரோ கார்பன் திட்டம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் செயல்படுத்தப்பட இருக்கிறது. புதுச்சேரியில் தொடங்கி காரைக்கால் வரையிலான ஆழ்கடல் பகுதியில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கடலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட தமிழக மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் உள்ள மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும். மேலும் கடற்பகுதியை ஒட்டியுள்ள நிலப்பகுதிகளும் கடுமையாக பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதற்கு விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதனால், விவசாயிகள், மீனவர்கள் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில், ஹைட்ரோ கார்பன் எடுக்க மக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்த தேவையில்லை என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது டெல்டா விவசாயிகள் மற்றும் மீனவர்களின் கொந்தளிப்பை மேலும் அதிகப்படுத்தி உள்ளது. தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன், ஹைட்ரோ கார்பன் எடுக்க மக்களிடம் கருத்துக்கேட்க தேவையில்லை என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதாகவும், அதனடிப்படையில் மத்திய அரசு இவ்வாறு அறிவித்ததாகவும் கூறப்படுகிறது. ஆனாலும் ஹைட்ரோ கார்பனுக்கான 5வது ஏலம் மீண்டும் விடப்பட இருப்பது பற்றியும், மக்களிடம் கருத்துக்கேட்க தேவையில்லை என்பது பற்றியும் தமிழக அரசோ, முதல்வர் மற்றும் துணை முதல்வரோ இதுவரை வாய்திறந்து எந்த கருத்ததையும் தெரிவிக்கவில்லை. இது விவசாயிகள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதனால் இந்த திட்டத்தை எதிர்த்து மீண்டும் விவசாயிகள், அரசியல் கட்சிகள் போராடி வருகின்றனர். மத்திய அரசு 5வது ஏலத்துக்கான அறிவிப்பு வெளியிட்ட மறுநாள் முதல் டெல்டாவில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த போராட்டம் நேற்று முதல் தீவிரமடைந்துள்ளது. மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் தலைமையில் மயிலாடுதுறையில் போலீஸ் தடையை மீறி நேற்று மாலை பேரணி நடந்தது. அய்யாறப்பர் கோயில் அருகில் இருந்து புறப்பட்ட பேரணி கண்ணாரத்தெரு வழியாக சின்னக்கடை வீதியை அடைந்தது. பின்னர் அங்கு நடந்த ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர்கட்சி, திராவிடர் விடுதலை கழகம், விசி, எஸ்டிபிஐ, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் திரளாக கலந்து கொண்டனர். நேற்றுமுன்தினம் டெல்டாவில் 282 கிராமசபை கூட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் ஜனவரி 28ம் தேதி (இன்று) தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கடலூர் ஆகிய மாவட்டத் தலைநகரங்களில், தி.மு.க. சார்பில் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெற்றது. திருவாரூரில் கலெக்டர் அலுவலகம் முன் எம்எல்ஏவும், மாவட்ட செயலாளருமான பூண்டி கலைவாணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் எம்எல்ஏ ஆடலரசன், தலைமை செயற்குழு உறுப்பினர் தலையாமங்கலம் பாலு, நகர செயலாளர்கள் திருவாரூர் பிரகாஷ், திருத்துறைப்பூண்டி பாண்டியன், கூத்தாநல்லூர் காதர் உசேன், ஒன்றிய செயலாளர்கள் தேவா, கலியபெருமாள், பாலசந்தர், அன்பரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நாகையில் தாலுகா அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கவுதமன் தலைமை வகித்தார். கீழ்வேளூர் எம்எல்ஏ மதிவாணன், நகர செயலாளர் பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். புதுக்கோட்டை திலகர் திடலில் தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், எம்எல்ஏவுமான ரகுபதி, வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லபாண்டியன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் எம்எல்ஏக்கள் பெரியண்ணன் அரசு, மெய்யநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தஞ்சை தலைமை தபால் நிலையம் முன் எம்எல்ஏவும், தெற்கு மாவட்ட செயலாளருமான துரை சந்திரசேகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வடக்கு மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம் முன்னிலை வகித்தார்.
எம்பிக்கள் பழனிமாணிக்கம், ராமலிங்கம், முன்னாள் அமைச்சர் உபயதுல்லா, தேர்தல் பணிக்குழு தலைவர் எல்.கணேசன், எம்எல்ஏக்கள் ராமச்சந்திரன், அன்பழகன், கோவி.செழியன், நீலமேகம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அதேபோல் கடலூரில் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. 5 மாவட்டங்களிலும் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திமுகவினர், விவசாயிகள், மீனவர்கள், மாணவர் அமைப்பை சேர்ந்தவர்கள் திரளாக கலந்து கொண்டு. ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராகவும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.