‘ஊழல் புகார் கூறியவர்’ ரயில்வே பொறியாளர் மர்மச் சாவு தண்டவாளத்தில் சடலமாக கிடந்தார்
1/23/2020 3:47:02 PM
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே செல்லமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சஜித் (42). கொச்சுவேளி ரயில் நிலையத்தில் மெக்கானிக்கல் பிரிவில் முதுநிலை பொறியாளராக பணிபுரிந்து வந்தார். இதற்கிடையே தன்னுடன் பணிபுரியும் சிலர் ஊழல் செய்து வருவதாகவும், தன்னையும் ஊழல் செய்ய வற்புறுத்தி வருவதாகவும் கூறி திருவனந்தபுரம் கோட்ட முது நிலை மேலாளருக்கு புகார் மனு அனுப்பினார். இந்த புகார் மனுவில் தன்னை சக ஊழியர்கள் மனரீதியாக துன்புறுத்துவதாகவும் குறிப்பிட்டு இருந்தார். இது தொடர்பாக தனது மனைவி அஸ்வதியிடமும் கூறி இருந்தார். தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் மனைவியிடம் கூறி இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் சஜித் இரவு பணியில் இருந்தார். அதைத் தொடர்ந்து காலை 6 மணிக்கு பணி முடிந்தது.
இந்த நிலையில் சுமார் 6.30 மணி அளவில் கொச்சுவேளி ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் சஜித் இறந்து கிடந்தார். இது குறித்து உடனடியாக பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரித்தனர். பின்னர் சஜித்தின் உடலை மீட்டனர். அதைத் தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் தங்களது விசாரணையை தொடங்கினர். சஜித் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது விபத்தில் இறந்தாரா? இல்லை யாராவது ரயிலின் முன்பு தள்ளி விட்டு கொலை செய்தார்களா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் திருவனந்தபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.