கரீபியன் தீவில் நித்தியானந்தா: நெருங்கியது சர்வதேச போலீஸ்
1/23/2020 2:26:16 PM
பெங்களூர்: மெக்சிகோவுக்கு அருகே உள்ள, கரீபியன் தீவில் சாமியார் நித்தியானந்தா பதுங்கியிருப்பதாக சர்வதேச போலீசார் கண்டுபிடித்துள்ளனர். பரபரப்புக்கு பெயர்போனவர் சாமியார் நித்தியானந்தா. இவருக்கு இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் ஆசிரமங்கள் உள்ளன. சாமியாராக இருந்தாலும், இவர் மீது வராத புகார்களோ, சர்ச்சைகளோ இல்லை. இந்தநிலையில், பெங்களூருவை சேர்ந்த ஜனார்தன சர்மா என்பவர், நித்தியானந்தா, தனது மகள்களை கடத்தி சிறை வைத்திருப்பதாக குஜராத் போலீசில் புகார் அளித்தார். அதன்படி, நித்தியானந்தா மீது அகமதாபாத் போலீசார் கடத்தல் வழக்குப்பதிவு செய்தனர்.
ஏற்கனவே நித்தியானந்தா மீது பாலியல் வழக்கு, ஆள் கடத்தல் வழக்கு என பல்வேறு வழக்குகள் கர்நாடகாவில் நிலுவையில் உள்ளதால், காவல்துறையில் சிக்கினால், எப்படியும் சிறை உறுதி என்பதை உணர்ந்த நித்தியானந்தா. வெளிநாடு ஓடி தலைமறைவாகிவிட்டார். இதனைதொடர்ந்து, அவர் ஈகுவடார் அருகே ஒரு தீவை விலைக்கு வாங்கி ‘கைலாசா’ என பெயர் சூட்டி தனி நாடாக அறிவிக்கும் முயற்சியில் இறங்கி, அதற்கான இணையதளங்களை உருவாக்கி பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும், தனது கைலாசா நாட்டில் குடியேற லட்சக்கணக்கானோர் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளதாக தெரிவித்தார்.
தொடர்ந்து தன் வாழ்க்கை வரலாற்றை பற்றி சோக வீடியோ, நகைச்சுவை வீடியோ என பல வீடியோக்களை வெளியிட்ட அவர் தன் மீது போலீசார் பொய் வழக்கு போடுவதாக குற்றம் சாட்டினார். இந்தநிலையில், சர்வதேச போலீஸ் (இன்டர்போல்) உதவியுடன் நித்தியானந்தாவை கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கடந்த டிசம்பர் மாதம் போலீசாருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி சர்வதேச போலீசை குஜராத் போலீசார் அணுகி நித்தியானந்தாவை கண்டுபிடிக்க உதவுமாறு வேண்டுகோள் வைத்தனர். இதன் அடிப்படையில் நித்தியானந்தாவுக்கு எதிராக சர்வதேச போலீசார் ‘புளூ கார்னர்’ நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர்.
குற்ற வழக்கில் தேடப்படும் ஒருவரின் அடையாளம், இருப்பிடம், செயல்பாடுகள் ஆகியவை குறித்து தகவல் தெரிந்தால் சம்பந்தப்பட்ட நாடுகள் சர்வதேச போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்பதற்காகவே ‘புளூ கார்னர்’ நோட்டீஸ் பிறப்பிக்கப்படுகிறது. இதன் மூலம் சர்வதேச போலீசாரின் அதிகாரத்துக்குட்பட்ட 150 நாடுகளில் நித்தியானந்தா எங்கு பதுங்கி இருக்கிறார் என்ற விபரம் விரைவில் வெளியாகும் என எதிர் பார்க்கப்படுகிறது. அப்படி விபரம் வெளியானதும், நித்தியானந்தாவை கைது செய்ய சர்வதேச போலீசார் ‘ரெட்கார்னர்’ நோட்டீஸ் பிறப்பிப்பார்கள். அதனைதொடர்ந்து அவரை கைது செய்வார்கள்.
இந்தநிலையில், நித்தியானந்தா கியூபா மற்றும் மெக்சிகோவுக்கு அருகே உள்ள கரீபியன் தீவில் பதுங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்காக அந்நாட்டு குடிமக்களுக்கு வழங்கப்படும் ‘பெஸிஸ்’ பாஸ்போர்ட்டை நித்தியானந்தா வாங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே, அவரை நெருங்கிவிட்டதாக போலீசார், தெரிவித்துள்ளனர். விரைவில் நித்தியானந்தா கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.