காதலை தொடர மறுத்ததால் ஆத்திரம்: சமூகவலைதளத்தில் காதலி நிர்வாண படத்தை வெளியிட்ட காதலன் கைது
1/22/2020 3:45:11 PM
கடலூர்: காதலியின் நிர்வாண புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்ட காதலனை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தை சேர்ந்தவர் கலையரசன் (24). இவர் கடலூர் வண்டிப்பாளையத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி கடலூரில் உள்ள செல்போன் விற்பனை கடையில் வேலைப்பார்த்து வந்தார். இந்த நிலையில், இவருக்கும் அதே கடையில் வேலைப்பார்த்த பெண் ஒருவருக்கும் காதல் ஏற்பட்டது. இவர்கள் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் காதலுக்கு பெண்ணின் வீட்டில் எதிர்ப்பு உருவானது.
இதையடுத்து அந்த பெண்ணும், கலையரசனுடன் பேசுவதை தவிர்த்துவிட்டதாக தெரிகிறது. இதன்பிறகு பலமுறை முயற்சித்தும் மீண்டும் அந்த பெண் காதலை தொடர மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த கலையரசன், காதலி தனக்கு அனுப்பி வைத்த நிர்வாண புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இதனால் பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண்ணின் பெற்றோர் கொடுத்த புகாரின்படி, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து கலையரசனை கைது செய்தனர். அவரது முகநூல் கணக்கையும் முடக்கினர்.