தொழிலதிபர் கொலையில் ஜோதிடர் உள்பட 7 பேர் கைது
1/22/2020 3:17:40 PM
மேட்டூர்: தொழில் அதிபர் கொலையில் ஜோதிடர் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.காஞ்சிபுரம் கி.கம்பம் தெருவை சேர்ந்தவர் பாலசுப்ரமணியம்(62). இவர் கிரஷர் இயந்திரங்களுக்கு, உதிரி பாகம் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வந்தார். நஷ்டம் ஏற்பட்டதால் தொழிற்சாலை மூடப்பட்டது. கடந்த 2018ம் ஆண்டு சேலம்மாவட்டம் மேச்சேரி வந்தார். அங்கு தனது நண்பர் மைலுதின் வீட்டில் தங்கி இருந்த போது, அவர் மூலம் தாரமங்கலம் அருகே செலவடையை சேர்ந்த ஜோதிடர் இளையராஜா(31), என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அவரிடம் மேனேஜராக சேர்ந்தார். இதனிடையே ஜோதிடர் இளையராஜா வெளியே சென்ற போது, அவரது மனைவியிடம் பாலசுப்ரமணியம் சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதுகுறித்து இளையராஜாவுக்கு தெரிய வந்த நிலையில், பாலசுப்ரமணியத்தை தீர்த்துக்கட்ட திட்டமிட்டுள்ளார். இளையராஜாவிடம் ஜோதிடம் பார்க்க, சேலம் பழைய சூரமங்கலத்தை சேர்ந்த நாசர், என்பவர் வந்தார். ஹோமியோபதி டாக்டரான இவர் ஆரம்பத்தில் ேவறு ஒருவரிடம் ஜோதிடம் பார்த்துள்ளார். இளையராஜாவிடம் ஜோதிடம் பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் நாசரிடம், உனக்கு பாலசுப்பிரமணியம் பில்லி சூனியம் வைத்துள்ளதாகவும், வரும் அமாவாசைக்குள் பாலசுப்ரமணியத்திற்கு ஒரு வழி செய்யாவிட்டால், உனது நிலை மோசமாகிவிடும், என தெரிவித்துள்ளார். இதையடுத்து நாசரும், இளையராஜாவும், பாலசுப்ரமணியத்தை தீர்த்துக்கட்ட வேண்டும் என முடிவு செய்தனர். கடந்த 19ம் தேதியன்று, இளையராஜா பூஜை செய்த பொருட்களை காவிரி கரையில் எரிப்பதற்காக, டூவீலரில் பாலசுப்ரமணியன், இளையராஜா, இவரது உறவினர் ராமச்சந்திரன் ஆகிய மூன்று பேரும் சென்றுள்ளனர்.
மேட்டூர் நீர்த்தேக்க பகுதியான திப்பம்பட்டி பகுதிக்கு சென்றபோது அங்கு பூஜை செய்த பொருட்களை இளையராஜா எரித்துக்கொண்டிருந்தார்.இளையராஜா கொடுத்த தகவலின்படி நாசர் தனது நண்பர்களுடன் காரில் அங்கு வந்திருந்தார். அப்போது நாசர், தனது நண்பர்களான ஏழுமலை, கணேசன், வெங்கடேசன், மாதேஷ் ஆகியோருடன் சேர்ந்து பாலசுப்ரமணியத்தின் கழுத்தில் நைலான் கயிற்றால் இறுக்கி கொலை செய்துள்ளனர். இதுகுறித்து ேமச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், நேற்று 5வது மைல் பகுதியில், மேச்சேரி போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது பாலசுப்ரமணியத்தை கொலை செய்த, இளையராஜா(31), ஏழுமலை(40), நாசர்(51), கணேசன்(31), வெங்கடேஷன்(34) ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவல்படி, கொலைக்கு உடந்தையாக இருந்த செலவடையை சேர்ந்த ராமசந்திரன்(27), கர்நாடக மாநிலம் சந்தப்பாடியை சேர்ந்த மாதேசன்(26) ஆகியோரை கைது செய்தனர். 7 பேரையும் மேட்டூர் கிளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.