இரவெல்லாம் சந்நியாசிகள் மடத்தில் கழித்த மோடி யாருடைய குடியுரிமையையும் சிஏஏ ரத்து செய்யாது: கொல்கத்தா நிகழ்ச்சியில் பிரதமர் பேச்சு
1/12/2025 2:24:48 PM
ஹவுரா: கொல்கத்தா சென்ற பிரதமர் மோடி, அங்குள்ள ராமகிருஷ்ண மடத்தில் தங்கிய அவர், இன்று அங்கு மக்களிடம் பேசினார். அப்போது, சிஏஏ யாருடைய குடியுரிமையையும் ரத்து செய்யாது என்று பேசினார். மேற்குவங்க மாநிலத்திற்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி இன்று, இரண்டாம் நாளில் விவேகானந்தரின் பிறந்த நாளை முன்னிட்டு, கொல்கத்தாவில் உள்ள பேலூர் ராமகிருஷ்ண மடத்திற்கு சென்றார். நேற்று மடத்திலேயே தங்கிய மோடி, இன்று காலை ராமகிருஷ்ண பரம்ஹம்சருக்கு மரியாதை செலுத்தி வழிபாடு செய்தார். தொடர்ந்து, அங்குள்ள சந்நியாசிகளுடன் சேர்ந்து பிரார்த்தனையில் ஈடுபட்டார். பிரதமர் மடத்திலேயே இரவை கழித்ததால், பேலூர் மடம் இருக்கும் இடம், எஸ்பிஜி மற்றும் மாநில காவல்துறையினரின் முழு கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டது.
கங்கை நதியில் பூஜைகளை முடித்தபின், ஐந்து வறுத்த உணவுகள், லூச்சி, அரிசி புட்டு, இனிப்புகள் மற்றும் பழங்களை உள்ளடக்கிய பிரசாதம் அவருக்கு வழங்கப்பட்டது. பிரதமரான பிறகு மோடி, பேலூர் மடத்திற்கு தற்போது இரண்டாவது முறையாக வந்துள்ளார். தொடர்ந்து பிரதமர் மோடி, பேலூர் மடத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:
‘யுவா திவாஸ்’ (தேசிய இளைஞர் தினம்) வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். விவேகானந்தரின் பிறந்த நாளாக ஜன. 12ம் தேதி தேசிய இளைஞர் தினம் கொண்டாடப்படுகிறது. கடைசியாக நான் இங்கு வந்தபோது, சுவாமி ஆத்மஸ்தானந்தாஜியின் ஆசீர்வாதங்களை எடுத்துக்கொண்டேன். இன்று அவர் எங்களுடன் உடல் ரீதியாக இல்லை. ஆனால் அவரது பணி, அவரது பாதை எப்போதும் ராமகிருஷ்ணரின் பாதையில் நமக்கு வழிகாட்டும்.
சுவாமி விவேகானந்தர், ‘எனக்கு 100 ஆற்றல்மிக்க இளைஞர்களைக் கொடுங்கள், நான் இந்தியாவை மாற்றுவேன்’ என்றார். அதனை எப்போதும் நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும். ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வம் மாற்றத்திற்கு அவசியம். இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுவதும் இளைஞர்களிடமிருந்து நிறைய எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டம் யாருடைய குடியுரிமையையும் ரத்து செய்யாது. நான் மீண்டும் சொல்கிறேன்; குடியுரிமைச் சட்டம் யாருடைய குடியுரிமையையும் ரத்து செய்வதல்ல. ஆனால் அது குடியுரிமையை வழங்குவதாகும். சுதந்திரத்திற்குப் பிறகு, மகாத்மா காந்தி மற்றும் பிற பெரிய தலைவர்கள் அனைவரும் பாகிஸ்தானின் துன்புறுத்தப்பட்ட மத சிறுபான்மையினருக்கு இந்தியா குடியுரிமை வழங்க வேண்டும் என்று நம்பினர். நீங்கள் இதை மிக தெளிவாக புரிந்து கொள்ளுங்கள். ஆனால் அரசியல் விளையாடுவோர் வேண்டுமென்றே புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக மக்கள் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள். இவ்வாறு அவர் பேசினார். சுதந்திரத்திற்குப் பிறகு, மகாத்மா காந்தி மற்றும் பிற பெரிய தலைவர்கள் அனைவரும் பாகிஸ்தானின் துன்புறுத்தப் பட்ட மத சிறுபான்மையினருக்கு இந்தியா குடியுரிமை வழங்க வேண்டும் என்று நம்பினர்.