தெற்கு காஷ்மீர் பள்ளத்தாக்கில் பரபரப்பு 2 தீவிரவாதிகளுடன் போலீஸ் டிஎஸ்பி கைது: காரில் அழைத்து சென்ற போது சிக்கினார்
1/12/2025 2:24:23 PM
காஷ்மீர்: தெற்கு காஷ்மீர் பள்ளத்தாக்கில், 2 தீவிரவாதிகளை அழைத்துக் கொண்டு சென்ற போலீஸ் டிஎஸ்பி கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து கைத்துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் விமான நிலைய போலீஸ் துணை போலீஸ் சூப்பிரண்டு (டிஎஸ்பி) டேவிந்தர் சிங் என்பவர், தெற்கு காஷ்மீரில் ரோந்து சென்ற போது இரண்டு ஹிஸ்புல் முஜாஹிதீன் மற்றும் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகளுடன் காரில் தடுத்து வைக்கப்பட்டதாக நேற்றிரவு ராணுவ படைப் பிரிவுக்கு தகவல் கிடைத்தது. இதுதொடர்பாக, தெற்கு காஷ்மீர் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் அதுல் கோயல் தலைமையிலான போலீஸ் அதிகாரிகள், டிஎஸ்பி மற்றும் தீவிரவாதிகள் இருக்கும் இடத்தை நோக்கி பயணித்தனர்.
தெற்கு காஷ்மீரின் குல்கத் மிர் பஜாரில், டிஎஸ்பியுடன் தீவிரவாதிகள் சென்ற காரை அதிகாரிகள் மடக்கிப் பிடித்தனர். விசாரணையில், ஷோபியன் பகுதியிலிருந்து 2 தீவிரவாதிகளை பள்ளத்தாக்குக்கு வெளியே டிஎஸ்பி கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. அதையடுத்து கைது ெசய்யப்பட்ட தீவிரவாதிகளில் லஷ்கர்-இ-தொய்பாவின் உயர் தளபதி நவீத் பாபு மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீனின் அல்தாஃப் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், தீவிரவாதிகளை காரில் அழைத்து சென்ற டிஎஸ்பி டேவிந்தர் சிங்கையும் அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து, தெற்கு காஷ்மீர் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் அதுல் கோயல் கூறுகையில், ‘‘டிஎஸ்பி டேவிந்தர் சிங் தனது நிலையை இழந்து செயல்பட்டுள்ளார். காரில் இருந்து இரண்டு ஏ.கே. ரக துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவரது வீட்டில் தேடுதல் நடத்தியபோது, இரண்டு கைத்துப்பாக்கிகள் மற்றும் ஒரு ஏ.கே. துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. டிஎஸ்பி-யின் செயல்பாடு துரதிர்ஷ்டவசமானது. விசாரணைக்கு பின் அவர் விடுவிக்கப்படுவார். போலீஸ் டைரக்டர் ஜெனரல் தில்பாக் சிங் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்’’ என்றார்.
இந்த மாத தொடக்கத்தில், ஜம்மு-காஷ்மீரின் நகரில் இருந்து லஷ்கர்-இ-தொய்பா (எல்இடி) அமைப்போடு இணைந்த தீவிரவாதியான நிசார் அகமது தார் என்பவரை பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். அவர் வசம் இருந்த ஆயுதங்களும் வெடிமருந்துகளும் மீட்கப்பட்டன.பாரமுல்லா மாவட்டத்தில் ஒரு தேடுதல் நடவடிக்கையின் போது லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதி சதாம் மிர் கைது செய்யப்பட்டு குறைந்தது இரண்டு வாரங்களுக்குப் பின்னர், தற்போது டிஎஸ்பி-யுடன் 2 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பும் நிலையில், ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் லஷ்கர்-இ-தொய்பா ஆகிய அமைப்புகள், குளிர்காலம் முடிந்தவுடன் தீவிரவாதத் தாக்குதல்களுக்கு தயாராகி வருவதாக சமீபத்திய உளவுத்துறை அறிக்கைகள் எச்சரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.