ரேஷனில் வரிசையில் நின்று பொங்கல் பரிசாக வாங்கிய ஆயிரம் ரூபாயுடன் டாஸ்மாக் கடையில் குவிந்த குடிமகன்கள்
1/10/2025 2:24:38 PM
சென்னை: தமிழகம் முழுவதும் நேற்று பொங்கல் பரிசு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இதனால் பல இடங்களில் ரேஷன் கடை முன்பு காலையில் இருந்தே மக்கள் குவியத் தொடங்கினர். அரிசி, முந்திரி பருப்பு வீட்டுக்கு போக, ஒரு 500 ரூபாய் மட்டும் டாஸ்மாக் கடைவாசலில் குடிமகன்களின் கையில் மினுமினுத்தது.
டாஸ்மாக் கடைகள் காலை 12 மணிக்கு திறக்கப்பட்டாலும் முதல் மூன்று மணி நேரத்தில் குவார்ட்டர், பீர் என்ற சிறிய அளவில்தான் வியாபாரம் இருக்கும். ஆனால் நேற்று முதல் பொங்கல் தொகுப்புடன் ரூ.1000 வழங்கப்படும் என்று அரசு அறிவித்து இருந்தது. இதை பயன்படுத்திக் கொண்ட டாஸ்மாக் நிர்வாகம் வழக்கத்தைவிட இரண்டு மடங்கு சரக்குகளை கடைகளில் இருப்பு வைக்க உத்தரவிட்டது.
இந்நிலையில் சென்னையின் பல பகுதிகளில் பெண்களின் கூட்டமும் ஆண்களின் கூட்டமும் ரேஷன் கடையில் பரிசு பொருட்களை வாங்க குவிந்தது. பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்த கடைகளை ஒட்டி கணவர்கள் ஓரமாக நின்று கொண்டிருந்தனர். தங்கள் வீட்டு பெண்கள் பணம் மற்றும் பொங்கல் பரிசுடன் ரேஷன் கடையை விட்டு வெளியே வந்ததும் சில ஆண்கள் அவர்களிடம் இருந்து ரூ.500 வாங்கிக் கொண்டு டாஸ்மாக் கடைக்கு ஜூட் விட்டனர்.அதேபோல ஆண்கள் வரிசையில் நின்று பொங்கல் பரிசு வாங்கியதும் அவர்களை கண்கொத்தி பாம்பாக பார்த்து கொண்டிருந்த அவர்களின் வீட்டு பெண்கள் ரேஷன் கடையில் இருந்து தங்கள் வீட்டு ஆண்கள் வந்ததும் பணத்தையும், பொங்கல் பரிசையும் பிடிங்கி வீட்டுக்கு எடுத்து செல்ல முயன்றனர்.பொங்கல் பையை கொடுத்த ஆண்கள் பணத்தை கொடுப்பதில் முரண்டு பிடித்தனர். இதனால் டென்ஷனான பெண்கள் போனால் போகுது என்று 500 ரூபாய் தாள் ஒன்றை கொடுத்துவிட்டு மற்றதை வீட்டுக்கு எடுத்துச் சென்றனர்.
பணம் கிடைத்த மகிழ்ச்சியில் இருந்த குடிமகன்கள் உடனடியாக படையெடுத்த இடம் டாஸ்மாக் கடை. மதியம் 12 மணிக்கு திறக்கப்படும் டாஸ்மாக் திறந்ததும் அங்கிருந்த கூட்டத்தை பார்த்த டாஸ்மாக் கடை ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். காரணம் ஞாயிற்றுக்கிழமைக்கு வரும் கூட்டம் வியாழன் கிழமையில் இருந்ததால் ஆச்சர்யத்துடன் பார்த்தனர். ஒரே நேரத்தில் குடிமகன்கள் மது வாங்க டாஸ்மாக் கடைகளில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து டாஸ்மாக் கடை ஊழியர் கூறுகையில், “வழக்கமாக காலை நேரத்தில் குவார்ட்டர் பாட்டில்கள்தான் அதிகமாக விற்கப்படும். ஆனால் நேற்று காலையிலேயே ஆப் மற்றும் ஃபுல் பாட்டில் கேட்டு குடிமகன்கள் வந்தனர். அனைவரும் 500 ரூபாய் நோட்டுகளை கொடுத்து சரக்கு கேட்டதால் சில்லரை தட்டுப்பாடு ஏற்பட்டது” என்றார்.