ஓரின சேர்க்கையில் ஈடுபட்டு வரும் மகளை மீட்டுதரக்கோரி போலீசில் தந்தை கதறல்
1/8/2025 4:44:03 PM
அண்ணாநகர்: சென்னை திருமங்கலம் பகுதியில் தனது தோழியுடன் ஓரின சேர்க்கையில் ஈடுபட்டு வரும் மகளை மீட்டு தரும்படி நேற்று திருமங்கலம் காவல் நிலையத்தில் அப்பெண்ணின் தந்தை கதறலுடன் புகார் அளித்தார். இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் ஆனந்த் (44, பெயர் மாற்றப்பட்டு உள்ளது). சென்னையில் இவரது மகள் தனது உறவினர் வீட்டில் தங்கியிருக்கும்போது, அப்பகுதியை சேர்ந்த வேறொரு பெண்ணுடன் ஓரின சேர்க்கையில் ஈடுபட்டு வந்துள்ளார். அவரை மீட்டு தரும்படி நேற்று திருமங்கலம் காவல் நிலையத்தில் நேற்று ஆனந்த் புகார் அளித்தார்.
தனது புகாரில், எனது மகள் பவித்ராவுக்கு (17, பெயர் மாற்றப்பட்டு உள்ளது) படிப்பு சரியாக வரவில்லை. இதனால் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கவைத்தேன். அங்கிருந்து அவர், கடந்த சில மாதங்களாக நுங்கம்பாக்கத்தில் ஒரு தனியார் பயிற்சி மையத்தில் ஆடை வடிவமைப்பு குறித்து படித்து வந்துள்ளார். அப்போது அங்கு படித்த மற்றொரு பெண்ணுடன் பவித்ராவுக்கு ஓரினசேர்க்கை தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் கடந்த சில நாட்களுக்கு முன் சைதாப்பேட்டை உறவினர் வீட்டிலிருந்து காணாமல் போய்விட்டார்.
அவரை தேடி வந்த நிலையில், அண்ணாநகர் மேற்கு பகுதியில் உள்ள பிரபல அமைப்பில் பவித்ரா கவுன்சிலிங் பெறுவதாக தெரியவந்தது. கடந்த 2 நாட்களுக்கு முன் அந்த அமைப்பிடம் எனது மகளை திருப்பி அனுப்பும்படி வலியுறுத்தியும், அவர்கள் என்னுடன் மகளை அனுப்ப மறுத்துவிட்டனர். மேலும், அவளுடன் தகாத உறவில் இருக்கும் பெண்ணும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். எனவே, நீங்கள் உரிய நடவடிக்கை எடுத்து, எனது மகள் பவித்ராவை மீட்டுத் தரவேண்டும் என குறிப்பிட்டு இருந்தார். இப்புகாரின்பேரில் திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பந்தப்பட்ட அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் பவித்ராவுடன் தொடர்பு உள்ள மற்றொரு பெண்ணிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.