கேரள மாணவியை குத்திக் கொன்று வால்பாறை சாலையில் சடலம் வீச்சு: கொடூர காதலன் கைது
1/8/2025 4:43:04 PM
வால்பாறை: கேரள மாணவியை குத்திக்கொலை செய்து சடலத்தை சாலையில் வீசிச்சென்ற கொடூர காதலன் கைது செய்யப்பட்டார்.கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம், கல்லூரை சேர்ந்தவர் வினோத். இவரது மகள் ஈவா (17), பிளஸ் 2 மாணவி. கடந்த சில நாட்களுக்கு முன் வீட்டில் இருந்து இவர் திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது பெற்றோர் கொடுத்த புகாரின்படி, கேரள போலீசார் வழக்குப்பதிவு செய்து, சந்தேகத்தின்பேரில் நெட்டூரை சேர்ந்த ஷாஜகான் மகன் சபீரை (26) பிடித்து விசாரணை செய்தனர்.
இதில ஈவாவும், தானும் காதலித்து வந்ததாகவும், அவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக கோவை மாவட்டம், வால்பாறை பகுதிக்கு அழைத்துச்சென்று கத்தியால் குத்தி கொலை செய்து சாலையோரம் வீசியதாகவும் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து கேரள போலீசார் சபீரை நேற்று வால்பாறை அழைத்து வந்தனர். வால்பாறை இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் உதவியுடன் ஈவாவின் சடலத்தை தேடினர். சபீரால், ஈவா கொலை செய்யப்பட்ட இடத்தை சரியாக அடையாளம் காட்ட முடியவில்லை. இதனால், விடியவிடிய போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர். இந்த நிலையில், வால்பாறை அடுத்துள்ள வரட்டுபாறை பகுதியில் சாலையோரம் ஈவாவின் சடலத்தை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.