நிர்பயா வழக்கில் 22ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்ற 4 குற்றவாளிகளை தொங்கவிட ‘மணிலா கயிறு’: ‘டம்மி’ தூக்கு நிறைவேற்ற திஹார் சிறை ஆயத்த பயிற்சி
1/8/2025 3:27:00 PM
புதுடெல்லி: நிர்பயா வழக்கில் வரும் 22ம் தேதி 4 குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற வசதியாக மணிலா கயிறு, பக்ஸர் சிறையில் இருந்து செல்கிறது. இதற்கிடையே, ‘டம்மி’ தூக்கு ஆயத்த பயிற்சியை சிறை துறை நிர்வாகம் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. கடந்த 2012ல் நடந்த நிர்பயா கற்பழிப்பு மற்றும் கொலை வழக்கில் நான்கு குற்றவாளிகளை ஜன. 22ம் தேதி காலை 7 மணிக்கு திஹார் சிறையில் தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. தூக்கு அறிவிக்கப்பட்ட குற்றவாளிகள் முகேஷ் (32), பவன் குப்தா (25), வினய் சர்மா (26), அக்ஷய் குமார் சிங் (31) ஆகிய நான்கு மரண தண்டனை குற்றவாளிகளுக்கு எதிராக, கூடுதல் அமர்வு நீதிபதி சதீஷ்குமார் அரோரா இந்த உத்தரவை அறிவித்தார். மேற்கண்ட குற்றவாளிகளை தூக்கிலிட பக்ஸர் மத்திய சிறை நிர்வாகம் ‘மணிலா’ கயிற்றை வழங்க தயாராக உள்ளது. மேலும் இதுபோன்ற 10 கயிறுகள் தலைநகரின் திஹார் சிறைக்கு வழங்க தயாராக உள்ளன. ஒரு கிலோ ரூ.180க்கு விற்கும் மெழுகு பூசப்பட்ட மணிலா கயிற்றை தயாரிப்பதில் பக்ஸர் சிறைச்சாலை நிபுணத்துவம் பெற்றது, மேலும் 80 கிலோ வரை எடையுள்ள ஒரு நபரையும் கூட தூக்கில் எவ்வித சிக்கலுமின்றி தொங்கவிட முடியும். ஏற்கனவே, கற்பழிப்பு குற்றவாளியைத் தூக்கிலிட்டதற்காக 2004ம் ஆண்டில் பக்ஸர் சிறையில் இருந்து கடைசியாக ஒரு மணிலா கயிறு அனுப்பப்பட்டது.
கடைசியாக கற்பழிப்பு - கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்றதைத் தொடர்ந்து அலிபூர் சிறையில் தனஞ்சய் சாட்டர்ஜி என்பவர் தூக்கிலிடப்பட்டார். இந்த மணிலா கயிறு, பிலிப்பைன்ஸ் நாட்டை பூர்வீகமாக கொண்டது. ஏனெனில் அவை தீவு தேசத்தில் வளரும் அபாகே மரத்தின் இலைகளிலிருந்து பெறப்பட்ட ஒரு வகை இழைகளிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. அந்த நார் மணிலா சணல் என்று அழைக்கப்படுகிறது. குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும்போது மட்டுமே, ஸ்பெஷலாக தயாரித்த கயிறுகளை அரசாங்கம் பக்ஸர் சிறையில் இருந்து பெறும். வலுவான பலம் இருப்பதால் கப்பல் கட்டுமானம், மீன்பிடி வலைகள் என பல்வேறு நோக்கங்களுக்காக மணிலா கயிறு பயன்படுத்தப்படுகிறது. பக்ஸர் சிறை, கங்கை நதிக்கரையில் அமைந்துள்ளது. இது சாதாரண நாட்களில் மிகவும் ஈரப்பதமாக இருக்கும். கயிறு தயாரிக்க ஈரப்பதம் மிகவும் அவசியம். ஈரப்பதமான சூழ்நிலைகள் கயிற்றை மென்மையாகவும் இன்னும் வலுவாகவும் ஆக்குகின்றன. கயிறு குற்றவாளியின் உயரத்தின் 1.6 மடங்கு மற்றும் உடலின் எடையைத் தாங்கக்கூடியது என்பதை உறுதிப்படுத்தும் அளவுக்கு கனமாக இருக்கும். பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இருந்தே, 1930ம் ஆண்டுகளில் இருந்து பக்ஸர் சிறை மணிலா கயிற்றை உருவாக்கி வருகிறது.
அதே கயிறு 26/11 தீவிரவாதி அஜ்மல் கசாப் மற்றும் நாடாளுமன்ற தாக்குதல் குற்றவாளி அப்சல் குருவை தூக்கிலிட பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.இதற்கிடையே, 4 குற்றவாளிகளை ஜன. 22ம் தேதி தூக்கிலிடப்படுவதற்கு முன்னதாக திஹார் சிறை அதிகாரிகள் ‘டம்மி’ (போலி) மரணதண்டனை நிறைவேற்றும் செயல்முறைகளை துவங்கியுள்ளனர். சிறை எண்: 3ல் தூக்கு தண்டனை நிறைவேற்றுவது குறித்து சிறைத் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘வரவிருக்கும் நாட்களில் போலி மரணதண்டனை நடத்துவதற்கு திஹார் சிறை தயாராகி வருகிறது. ஆனால் இன்று அந்த செயலை செய்யவில்லை. சிறை 3ல் அவர்களுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்படும். போலி மரணதண்டனை நிறைவேற்றப்படும் நேரத்தில், பொதுப்பணித்துறையின் நிர்வாக பொறியாளர், கண்காணிப்பாளர் மற்றும் பிற சிறை அதிகாரிகள் கலந்து கொள்வார்கள். தூக்கை நிறைவேற்ற உத்தரபிரதேச சிறைத் துறையிலிருந்து ஒருவர் அழைக்கப்படுவார்’ என்றனர்.