வீடியோ காலில் சிறுமியை ஆபாச படம் பிடித்து ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டல்
1/7/2025 3:11:32 PM
தண்டையார்பேட்டை: விருதுநகர் மாவட்டம் பள்ளப்பட்டி ராஜன் தெருவை சேர்ந்த சாய் என்ற ராஜசிவசுந்தர் (29). பிடெக் பட்டதாரியான இவர், சென்னை கோயம்பேடு, திருமுல்லைவாயல், ஆவடி, மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வருகிறார். செல்போனில் கேம் விளையாடும்போது வண்ணாரப்பேட்டை சீனிவாசபுரத்தை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் ராஜசிவசுந்தருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது, தனது பெயர் சந்துரு என்றும் பிளஸ் 2 பிடித்து வருவதாக கூறி அந்த சிறுமியிடம் காதலிப்பதாக கூறியுள்ளார். அதன்படி இருவரும் காதலித்து வந்துள்ளனர். பல நாட்கள் ஆனதும் வீடியோ காலில் ஆடையின்றி போஸ் கொடுக்கும்படி சிறுமியிடம் கூறியுள்ளார். காதலன்தானே என நினைத்து சிறுமி ஆடையின்றி வீடியோ காலில் போஸ் கொடுத்துள்ளார். அதை செல்போனில் ராஜசிவசுந்தர் பதிவு செய்துள்ளார்.
சில நாட்கள் கழித்து சென்னை வந்த ராஜசிவசுந்தர், சிறுமியை கோயம்பேடு வரும்படி கூறியுள்ளார். ஆனால் சிறுமி அங்கு செல்லவில்லை. இதனால் கோபமடைந்த ராஜசிவசுந்தர், வீடியோ காலில் எடுத்த சிறுமியின் ஆபாச படத்தை சிறுமி செல்போனில் அனுப்பி மிரட்டியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த சிறுமி இதுகுறித்து தனது தாயிடம் கூறியுள்ளார். இதையடுத்து, சிறுமியின் தாய், செல்போனில் ராஜசிவசுந்தரிடம் பேசினார். அப்போது, 5 லட்சம் ரூபாய் தந்தால் ஆபாச படத்தை அழித்துவிடுகிறேன் என கூறியுள்ளார். அவ்வளவு பணம் எங்களிடம் இல்லை, பணத்தை புரட்டி தருகிறோம் என கூறியுள்ளனர்.
இதையடுத்து நேற்று முன்தினம் வண்ணாரப்பேட்டை போலீசில் சிறுமியின் பெற்றோர் புகார் செய்தனர். அதன்படி வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சுப்புலட்சுமி உத்தரவின்பேரில் வண்ணாரப்பேட்டை உதவி ஆணையர் ஜுலியர்சீசர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் தனிப்படை அமைத்து தேடினர். பின்னர், சிறுமியின் சித்தப்பா பேசுவதாக ராஜசிவசுந்தரிடம் செல்போனில் போலீசார் பேசியுள்ளனர். அப்போது, பணத்தை எங்கு வைத்து தரவேண்டும் என கேட்டுள்ளனர். அதற்கு கோயம்பேடு வரும்படி ராஜசிவசுந்தர் கூறியுள்ளார். அதன்படி போலீசார் கோயம்பேடு சென்றனர். அங்கு ராஜசிவசுந்தரை மடக்கிபிடித்து விசாரித்தனர். பின்னர் அவரிடமிருந்து 3 செல்போன், ஒரு லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 11 பெண்களை ஆபாச படம் எடுத்து ஏமாற்றி பணம் பறித்ததும் தெரியவந்துள்ளது. இதையடுத்து கைது செய்யப்பட்ட ராஜசிவசுந்தரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.