முத்துப்பேட்டை தர்காவில் சந்தனக்கூடு ஊர்வலம் கோலாகலம்
1/6/2025 4:39:36 PM
முத்துப்பேட்டை: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடையில் உள்ள சேக்தாவூது ஆண்டவர் தர்கா உலகப் புகழ்பெற்றதாகும். இந்த தர்காவிற்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மட்டும் அல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான இஸ்லாமியர், இந்துக்கள் என அனைத்து மதத்தினரும் வந்து செல்கின்றனர். மேலும் சுற்றுலா தளமாகவும் திகழ்கிறது. புகழ்பெற்ற இந்த தர்காவின் பெரியகந்தூரி விழா ஆண்டுதோறும் பிரம்மாண்டமாக நடைபெறும். இந்த ஆண்டின் 718வது பெரிய கந்தூரி விழா கடந்த 27ம் தேதி துவங்கியது. விழாவையொட்டி தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வந்தன. விழாவின் முக்கிய நாளான இன்று அதிகாலை சந்தன கூடு ஊர்வலம் கோலாகலமாக நடைபெற்றது. நேற்றிரவு 10.30 மணிக்கு தர்ஹா முதன்மை அறங்காவலர் எஸ்.எஸ்.பாக்கர்அலி சாகிப் இல்லத்தில் வைக்கப்பட்ட சந்தனங்கள் நிரப்பிய குடங்களை தர்காவிற்கு எடுத்து செல்லும் நிகழ்ச்சி நடந்தது.
நள்ளிரவு 1 மணிக்கு சிறப்பு தொழுகை நடந்தது. அதனை தொடர்ந்து நள்ளிரவு 2.30 மணிக்கு தர்கா முதன்மை அறங்காவலர் எஸ்.எஸ்.பாக்கர்அலி சாகிப் தலைமையில் டிரஸ்டிகள் புனித சந்தன குடத்தை தலையில் சுமந்து வந்து கண்ணாடிகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூட்டில் வைத்து வாணவேடிக்கை, மேள தாளங்களுடன் சந்தனக்கூடு ஊர்வலம் துவங்கியது.
சந்தனக்கூடு ஊர்வலம் அடக்கஸ்தலம் சென்று பின்னர் ஆற்றங்கரை பாவா தர்கா, அம்மா தர்கா பகுதிக்கு சென்று மீண்டும் தர்காவை மூன்று முறை வலம் வந்தது. அங்கு திரண்ட அனைத்து தரப்பு மக்களும் பூக்களை வாங்கி தங்களின் வேண்டுதலை வேண்டி சந்தனக்கூடு மீது வீசி பிராத்தனை செய்தனர்.
பின்னர் இன்று அதிகாலை 5 மணிக்கு சந்தன கூட்டிலிருந்து சந்தன குடங்கள் தர்காவிற்கு எடுத்து வரப்பட்டு ஷேக்தாவூது ஆண்டவர் சமாதிக்கு புனித சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இஸ்லாமியர்கள் மட்டும்மின்றி அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொண்டனர்.