தேர்தலில் வெற்றி பெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகள் நாளை பதவி ஏற்பு: 11ம் தேதி தலைவர், து.தலைவருக்கு மறைமுக தேர்தல்
1/5/2025 2:14:19 PM
சென்னை: ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற மாவட்ட ஊராட்சி, ஒன்றிய குழு கவுன்சிலர்கள் மற்றும் ஊராட்சி தலைவர்கள், வார்டு கவுன்சிலர்கள் பதவி ஏற்பு விழா நாளை நடக்கிறது. தலைவர், துணை தலைவர் தேர்வு 11ம் தேதி நடக்கிறது. தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரு கட்டமாக தேர்தல் நடந்தது. 515 மாவட்ட கவுன்சிலர், 5090 ஒன்றிய கவுன்சிலர் உள்பட தமிழகம் முழுவதும் 91,975 பதவிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. கடந்த 2 மற்றும் 3ம் தேதிகளில் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடந்தது. இந்நிலையில், தேர்தல் முடிவுகளை மாநில தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
அதன்படி, 515 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் 513 இடங்களுக்கான முடிவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் திமுக அதிகபட்சமாக 243 மாவட்ட கவுன்சிலர் இடங்களையும், அதிமுக 214 மாவட்ட கவுன்சிலர் இடங்களையும் கைப்பற்றியுள்ளது. இதற்கு அடுத்தபடியாக, காங்கிரஸ் 22 இடங்களையும், பாஜ, இந்திய கம்யூனிஸ்ட் தலா 7 இடங்களையும், தேமுதிக 3 இடங்களையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2 இடங்களையும் கைப்பற்றியுள்ளன. மற்ற கட்சிகள் 22 இடங்களை பிடித்துள்ளன. 5090 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் 5085 இடங்களுக்கான முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் திமுக 2099 இடங்களை கைப்பற்றியுள்ளது. அதிமுக 1781 இடங்களை வென்றுள்ளது.
இதற்கு அடுத்தபடியாக, காங்கிரஸ் 131 இடங்களையும், தேமுதிக 91 இடங்களையும், பாஜ 85 இடங்களையும், இந்திய கம்யூனிஸ்ட் 62 இடங்களையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 33 இடங்களையும் கைப்பற்றியுள்ளன. மற்றவர்கள் 795 இடங்களை கைப்பற்றியுள்ளனர். ஏற்கனவே 18,570 பதவிகளுக்கு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். வெற்றி பெற்ற புதிய கவுன்சிலர்கள் மற்றும் ஊராட்சி தலைவர்கள் பதவி ஏற்பு விழா நாளை(6ம் தேதி) காலை 10 மணிக்கு அந்தந்த ஒன்றிய, ஊராட்சி அலுவலகங்களில் நடைபெற உள்ளது. இதையடுத்து, மாவட்ட ஊராட்சி தலைவர், துணை தலைவர், ஒன்றிய குழு தலைவர், துணை தலைவர் மற்றும் ஊராட்சி துணை தலைவர்களை தேர்ந்தெடுக்கும் மறைமுக தேர்தல் வரும் 11ம் தேதி நடைபெற உள்ளது. மாவட்ட ஊராட்சி மற்றும் ஒன்றிய குழுவில் சம பலம் அல்லது ஒன்றிரண்டு வார்டுகள் குறைந்த இடங்களில் தலைவர் பதவிகளை பிடிக்க சுயேட்சைகளை இழுக்க குதிரை பேரத்தில் ஆளுங்கட்சி ஈடுபட்டு வருகிறது. ஏற்கனவே ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில் சுயேட்சையாக வென்ற 2 பெண் கவுன்சிலர்கள் கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. பணம், கான்ட்ராக்ட் என ஆசை வார்த்தைகளை கூறி சுயேட்சைகளை இழுக்கும் முயற்சியில் இறங்கி உள்ளனர். மசியாதவர்களை போலீசை வைத்து வழக்கு போடுவோம் என மிரட்டும் பணியும் நடந்து வருவதாக கூறப்படுகிறது. 2வது நாளாக இன்றும் சுயேட்சைகளை வளைக்கும் பணியில் ஆளுங்கட்சியினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.