பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டப்பேரவை நாளை கூடுகிறது: கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றுகிறார்
1/5/2025 2:11:51 PM
சென்னை: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டப்பேரவை நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது. கூட்டம் தொடங்கியதும், கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றுகிறார். இந்த கூட்டத் தொடரில் விலைவாசி உயர்வு, குடியுரிமை திருத்த சட்டம் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து புயலைக்கிளப்ப எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. தமிழக சட்டப்பேரவை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல்வாரம் கூடுவது வழக்கம். இந்தாண்டின் முதல் கூட்டம் நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது. கூட்டம் தொடங்கியதும், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றுகிறார். இந்த உரையில், தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் வளர்ச்சி பணிகள் இடம்பெறுகிறது. கவர்னர் உரையாற்றி முடித்ததும் பேரவை கூட்டம் முடிவடையும். இதையடுத்து சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வு குழு கூட்டம் நடத்தி, சட்டப்பேரவை கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்தலாம் என்பது குறித்து முடிவு செய்து அறிவிக்கப்படும். 6ம் தேதி கூடும் பேரவை கூட்டம் 10ம் தேதி வரை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக சட்டப்பேரவையில் உரையாற்ற நாளை காலை 9.50 மணிக்கு வரும் தமிழக கவர்னரை, சபாநாயகரும், சட்டப்பேரவை செயலாளரும் வரவேற்று சட்டப்பேரவைக்குள் அழைத்து வருவார்கள். 6 மாதங்களுக்கு பிறகு தமிழக சட்டப்பேரவை கூட்டம் நாளை நடைபெறுகிறது என்பதால் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. தற்போது விலைவாசி உயர்வால் மக்கள் தவித்து வருகின்றனர். குறிப்பாக, வெங்காயம், பூண்டு, புளி, பருப்பு வகைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்து வருவதால் பொதுமக்கள் திண்டாடி வருகின்றனர். இந்த விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சட்டசபையில் திமுக குரல் கொடுக்க வாய்ப்புள்ளது. கடந்த மாதம் நாடாளுமன்றத்திலும், மாநிலங்களவையிலும் குடியுரிமை திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டது.
இதற்கு தமிழகத்தில் திமுக உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த சட்டத்துக்கு எதிராக பல்வேறு போராட்டங்களும் நடந்து வருகிறது. இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்கை திரும்ப பெறக்கோரியும், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டப்பேரவையில் தனி தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்ற வேண்டும் என்றும் சட்டமன்ற கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்த திட்டமிட்டுள்ளார். அதேபோன்று நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் ஆளுங்கட்சியினர் போலீசார் மற்றும் தேர்தல் அதிகாரிகள் உடந்தையுடன் முறைகேட்டில் ஈடுபட்டனர் என்று மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக, காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சியினர், விடுதலை சிறுத்தைகள் குற்றம் சாட்டினர். இது தொடர்பாகவும், சட்டப்பேரவை கூட்டத்தில் குரல் எழுப்புவார்கள். ஊரக உள்ளாட்சி தேர்தலை தொடர்ந்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு உடனடியாக தேர்தல் அறிவிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் சார்பில் பேரவை கூட்டத்தில் வலியுறுத்துவார்கள். மேலும் பல்வேறு மக்கள் நலன் சார்ந்த பிரச்னைகள் தொடர்பாகவும் எதிர்க்கட்சியினர் பிரச்னையை எழுப்புவார்கள் என்று கூறப்படுகிறது. இதனால், நாளை முதல் 5 நாட்கள் நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தில் அனல் பறக்கும் விவாதத்திற்கு பஞ்சம் இருக்காது. இந்த நிலையில் சட்டமன்ற கூட்டத்தொடரில் சொத்து உரிமையாளர் மற்றும் வாடகைதாரர் உரிமைகள் சட்ட திருத்தம் உள்ளிட்ட 6 சட்ட திருத்தங்களுக்காக கொண்டு வரப்பட்ட அவசரச் சட்டங்கள் பேரவையில் நிறைவேற்றப்படும் எனத் தெரிகிறது. இதற்கிடையே நேற்று மரபுப்படி கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை தமிழக சபாநாயகர் தனபால் நேரில் சந்தித்தார். அப்போது சட்டசபையில் உரை நிகழ்த்த வருமாறு முறைப்படி அழைப்பு விடுத்தார்.