சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடம் நிரப்ப அதிகாரம் உண்டா?... உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு
1/5/2025 2:09:45 PM
புதுடில்லி: சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில், மாநில அரசு அமைத்த ஆணைக்குழு செல்லுமா? அல்லது சிறுபான்மையினர் பள்ளி நிர்வாகத்துக்கு அதிகாரம் உண்டா? என்பது குறித்த முக்கியமான தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் நாளை வழங்க உள்ளது. மேற்குவங்க மாநிலம் மதரஸா சேவை ஆணையச் சட்டம் - 2008ன்படி, ஒரு ஆணைக் குழு அம்மாநில அரசால் உருவாக்கப்பட்டது. அதாவது, மதரஸா சார்பில் நடத்தப்படும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர்களை நியமிக்கும் போது, மேற்கண்ட சட்டத்தின் 8வது பிரிவின்படி அந்த ஆணைக்குழு பரிந்துரைக்கும் நபர்களையே ஆசிரியர்களாக நியமிக்க முடியும். காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புதல், அதுதொடர்பான வழிகாட்டுதல் முறைகளை பின்பற்றுதல் தொடர்பாக இந்த ஆணைக்குழு கூறியபடிதான் செயல்பட முடியும். காரணம், மதரஸா பள்ளிகள் அரசு நிதியுதவியுடன் செயல்படுகின்றன. ஆணைக்குழு பரிந்துரை, விசாரணை, நிதியளிப்பு போன்ற பல்வேறு பிரச்னைகளால் ஆசிரியர் காலிப் பணியிடங்களை உடனடியாக நியமிக்க முடியவில்லை என்று, பல்வேறு மதரஸாக்களின் நிர்வாகக் குழு சார்பில் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கில், மேற்குவங்க மாநிலம் மதரஸா சேவை ஆணையச் சட்டம் - 2008, அரசியலமைப்பிற்கு முரணானது. இது 30வது பிரிவை மீறுவதாக உள்ளது. இது, அனைத்து சிறுபான்மையினருக்கும் தங்களுக்கு விருப்பமான கல்வி நிறுவனங்களை நிறுவுவதற்கும், நிர்வகிப்பதற்கும் உள்ள உரிமையை மீறுவதாக உள்ளது. மேலும், மதரஸா சேவை ஆணையச் சட்டம் - 2008 தெளிவற்ற நிலையில் உள்ளதாக கூறப்பட்டது. இம்மனுவை விசாரித்த கொல்கத்தா உயர்நீதிமன்றம், அனைத்து சிறுபான்மையினருக்கும் தங்களுக்கு விருப்பமான கல்வி நிறுவனங்களை நிறுவுவதற்கும், நிர்வகிப்பதற்கும் உரிமை உண்டு என்று கடந்த 2017ல் தீர்ப்பளித்தது. ஆனால், ஆணைக்குழுவால் நியமனம் செய்யப்பட்ட மற்றும் புதிய சட்டத்தின்படி நியமிக்கப்பட்ட ஆசிரியர்களால் கொல்கத்தா உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. அவர்களின் மனுவை விசாரிக்க ஒப்புக் கொண்ட உச்சநீதிமன்றம், அவர்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்கியதுடன், இறுதி உத்தரவு வரும் வரை அவர்களை வேலையில் இருந்து நீக்கி, அவர்களுக்கு சம்பளத்தை விடுவிக்க வேண்டாம் என்று மாநில அரசுக்கு உத்தரவிட்டது.
மேலும், இவ்வழக்கால், 2,600க்கும் மேற்பட்ட காலியிடங்களை நிரப்பமுடியாமல் இருந்த நிலையில், மே 2018ல் உச்சநீதிமன்றம் மேற்கண்ட பணியிடங்களை நிரப்ப அனுமதித்தது. இந்நிலையில், மேற்கு வங்காள மதரஸா சேவை ஆணையச் சட்டம், 2008ன் அரசியலமைப்பின்படி செல்லுபடியாகுமா? என்பதை தீர்மானிக்கும் இவ்வழக்கு, நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இவ்வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா மற்றும் யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் நாளை வழங்க உள்ளது. மேலும், சமூகத்தின் நிலையை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்ட சட்டமன்ற நடைமுறையை அடிப்படையாக கொண்ட இச்சட்டம், மதரஸா உள்ளிட்ட மற்ற சிறுபான்மை பள்ளி நிர்வாகங்களுக்கும் பொருந்துமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. சிறுபான்மையினர் நடத்தும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களை நியமிக்க மதரஸாக்கள் உள்ளிட்ட சிறுபான்மை நிறுவனங்களின் உரிமையை அரசாங்கத்தால் பறிக்க முடியுமா என்பது குறித்து ஒரு முக்கியமான தீர்ப்பை உச்சநீதிமன்றம் நாளை வழங்க உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், மதரஸாக்களில் ஆசிரியர்களை நியமிப்பது ஒரு ஆணையத்தால் கட்டுப்படுத்த முடியுமா என்பது உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம் முடிவுக்கு வரும் என்றே கூறப்படுகிறது.