வருகிற 11ம் தேதி ஊராட்சி ஒன்றிய தலைவர், பஞ்சாயத்து துணை தலைவர் தேர்தல் சுயேச்சை கவுன்சிலர்கள் கடத்தல்?
1/4/2025 2:27:02 PM
* இழுபறி இடங்களில் தலைவர் பதவியை கைப்பற்ற போட்டி
* பணம், கான்ட்ராக்ட் தருவதாக ஆளுங்கட்சி குதிரை பேரம்
சென்னை: தமிழகத்தில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்துள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய உறுப்பினர்கள் வரும் 6ம் தேதி பதவி ஏற்க உள்ளனர். ஊராட்சி ஒன்றிய தலைவர், பஞ்சாயத்து துணை தலைவர் பதவிகயைப் பிடிக்க சுயேச்சைகளை கடத்தவும், அவர்களுக்கு பணம் கொடுத்து இழுக்கவும், அதிமுக குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் 2 கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது. இதில் 18 ஆயிரத்து 570 பதவிகளுக்கு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். மீதமுள்ள இடங்களுக்கு 2 லட்சத்து 31 ஆயிரத்து 890 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
தமிழகம் முழுவதும் மொத்தமாக 91,975 பதவிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. மொத்தம் 515 மாவட்ட கவுன்சிலர், 5,090 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கும், மீதமுள்ள கிராம ஊராட்சி தலைவர் மற்றும் கிராம ஊராட்சி வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கும் தேர்தல் நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் 315 மையங்களில் எண்ணும் பணி நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு தொடங்கியது. நேற்று இரவு வரை இந்த பணி நடந்தது.மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு நடந்த தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர்கள் 268 இடங்களிலும், அதிமுக கூட்டணி வேட்பாளர் 243 இடங்களிலும் வெற்றி பெற்றனர். சுயேச்சைகள் இரண்டு இடங்களில் வெற்றி பெற்றிருந்தனர். 2 இடங்களுக்கு முடிவு அறிவிக்கப்படவில்லை. அதேபோன்று, மொத்தமுள்ள ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கான தேர்தலில் திமுக கூட்டணி 2346 இடங்களிலும், அதிமுக கூட்டணி 2182 இடங்களிலும், மற்றவர்கள் 558 இடங்களிலும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 4 இடங்களுக்கு முடிவு அறிவிக்கப்படவில்லை. அறிவிக்கப்படாத 6 இடங்களிலும் இன்று முடிவு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாநில தேர்தல் ஆணைய அறிவிப்புப்படி தேர்தல் நடவடிக்கைகள் இன்று முடிவு பெறுகின்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி தலைவர்களின் முதல் கூட்டம் மற்றும் பதவி ஏற்பு விழா வரும் 6ம் தேதி(நாளைமறுதினம்) அந்தந்த ஒன்றிய, ஊராட்சி அலுவலகங்களில் நடைபெற உள்ளது. மாவட்ட ஊராட்சி உறுப்பினர்களுக்கான பதவி ஏற்பு விழா கலெக்டர் அலுவலகங்களில் நடைபெறும்.இதைத் தொடர்ந்து மாவட்ட ஊராட்சி தலைவர், துணை தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர், துணை தலைவர் மற்றும் பஞ்சாயத்து துணை தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் வரும் 11ம் தேதி நடக்கிறது. பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு மட்டும் நேரடி தேர்தல் நடந்துள்ளது. மற்ற பதவிகளுக்கான தலைவர், துணை தலைவர்கள் மற்றும் ஊராட்சி துணை தலைவர்களாக அந்தந்த வார்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களில் ஒருவர் தேர்வு செய்யப்படுவார்.
தற்போது தலைவர், துணை தலைவர் பதவிகளை பிடிப்பதில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக திமுகவும், அதிமுகவும் சம இடங்களில் வென்ற இடங்களில் சுயேட்சைகளுக்கு மவுசு அதிகரித்துள்ளது.தேர்தல் நடத்தப்பட்ட 27 மாவட்டங்களில் திமுக, அதிமுக தலா 13 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளை பிடிக்கும் நிலை உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் திமுக, அதிமுக தலா 8 மாவட்ட வார்டு கவுன்சிலர் பதவிகளை கைப்பற்றியதால் இங்கு மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவியை கைப்பற்றுவது யார் என்ற போட்டி ஏற்பட்டுள்ளது.கோவை மாவட்டம் அன்னூர் ஒன்றியத்தில் திமுகவும், அதிமுகவும் தலா 5 இடங்களை பிடித்துள்ளன. 2 சுயேட்சைகள் வென்றுள்ளனர். மன்னார்குடி ஒன்றியத்தில் அதிமுக 11 வார்டுகளையும், திமுக 10 வார்டுகளையும் பிடித்துள்ளது. ஒரே ஒரு சுயேட்சை வென்றுள்ளார். அவர் திமுகவை சேர்ந்தவர் என்பதால் திமுகவின் பலம் 11 ஆக உள்ளது. இங்கு தலைவர் பதவியை பிடிப்பதில் போட்டி நிலவுகிறது.
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஒன்றியத்தில் மொத்தமுள்ள 19 இடங்களில் அதிமுக கூட்டணி 8, திமுக 7 இடங்களை பிடித்துள்ளது. சுயேச்சை வேட்பாளர்கள் 4 பேர் வாகை சூடி உள்ளனர். அவர்களின் ஆதரவை பெறும் கட்சி ஒன்றிய தலைவர் பதவியை பிடிக்கும்.ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில் மொத்த உறுப்பினர்கள் 19 பேர். இதில் திமுகவுக்கு 8 இடங்களும், காங்கிரசுக்கு ஒரு இடமும், அதிமுகவுக்கு 3 இடமும், பாமகவுக்கு 4 இடங்களும், தேமுதிகவுக்கு ஒரு இடமும் கிடைத்தது. 2 பெண்கள் சுயேச்சைகளாக வெற்றி பெற்றனர். இந்த சுயேச்சைகள் 2 பேரும் பாமகவில் சீட் கிடைக்காததால் போட்டி வேட்பாளர்களாக நின்று வெற்றி பெற்றவர்கள்.
இந்த ஒன்றிய தலைவர் பதவியை அதிமுக கூட்டணியில் பாமக கேட்டு வருகிறது. பாமகவுக்கு ஆதரவு தர வேண்டுமானால் தங்களுக்கு துணைத்தலைவர் பதவி வேண்டும் என இருவருமே கேட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே இருவரும் நேற்று முதல் உள்ளூரில் இல்லை. இதில் சுமதி என்ற கவுன்சிலருக்கு போன் செய்தால் அவர் போனை எடுக்கவில்லை. இன்னொருவர் போனில் பேசினார். அவர் ஊட்டியில் இருந்து பேசுவதாக கூறுகிறார். இன்னொருவர் செந்தமிழ்ச்செல்வி அவர் நான் காரில் செல்கிறேன், பிறகு பேசுகிறேன் என்று கூறினார்.சம பலத்தில் உள்ள இடங்களில் அல்லது ஒன்று, இரண்டு இடங்கள் குறைந்த இடங்களில் சுயேட்சைகளுக்கு திடீர் கிராக்கி ஏற்பட்டுள்ளது. அவர்களை தங்கள் பக்கம் இழுக்க அதிமுக குதிரை பேரம் பேசி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பணம், உள்ளாட்சிகளில் கான்ட்ராக்ட் பணி ஒதுக்கீடு, கட்சி பதவி தருவதாக ஆசை வார்த்தைகளை கூறி சுயேட்சைகளிடம் பேசி வருகின்றனர். அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் மூலம் இந்த பணி நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில் சுயேட்சையாக வெற்றி பெற்ற இருவரை ஆளுங்கட்சியினர் கடத்தி சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது.
தூத்துக்குடிமாவட் டத்தில் கோவில்பட்டி ஊராட்சி, கருங்குளம் ஊராட்சியில் கடும் இழுபறி ஏற்பட்டுள்ளது. அங்கு ஆள் கடத்தல் வாய்ப்புகள் உருவாகியுள்ளதாகவும், ஆளும்கட்சி பேரம் பேசி வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. சேலம் மாவட்டத்தில் சேலம் ஒன்றியம், ஏற்காடு ஒன்றியங்களில் திமுக, அதிமுக சம்பலத்துடன் உள்ளது. இதனால் இரு கட்சிகளும் மறைமுக பேச்சு வார்த்தை தொடங்கியுள்ளது.அயோத்திப்பட்டணம் ஒன்றியத்தில் உள்ள 19 வார்டுகளில் திமுக 7, அதிமுக 6, சுயேட்சைகள் 6 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளனர். இதனால் அவர்களை அதிமுக குறிவைத்து பேச்சு வார த்தை நடத்தி வருகிறது. கெங்கவல்லி ஒன்றியத்தில் உள்ள 11 வார்டுகளில் 5 திமுக, 5 அதிமுக கைப்பற்றியுள்ளது. சுயேட்சையாக ஜெயித்தவரிடம் அதிமுக பேச்சு வார்த்தை தொடங்கியுள்ளது.நாமக்கல் மாவட்டத்தில் மல்லசமுத்திரம் ஒன்றியத்தில் 15 வார்டுகளில் திமுக 7, அதிமுக 7 வார்டுகளை கைப்பற்றியது. சுயேட்சையாக ஜெயித்த பெண் வேட்பாளருக்கு துணைதலைவர் ஆசை காட்டி அதிமுகவினர் பேச்சு நடத்தி வருகின்றனர். தக்கலை ஒன்றியத்தில் அதிமுக கூட்டணி 5 இடங்களிலும் திமுக கூட்டணி 5 இடங்களிலும் என சமநிலையில் உள்ளதால் இங்கு சுயேட்சைகளை இழக்கும் வேலைகளில் அதிமுக ஈடுபட்டுள்ளது.
இவ்வாறு தமிழகம் முழுவதுமேசுயேட்சைகளை இழக்கும் வேலைகளை அதிமுக தொடங்கியுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.ஏற்கனவே வாக்கு எண்ணிக்கையில் பல இடங்களில் குளறுபடிகள், விதி மீறல்கள் நடந்தது.தற்போது சுயேட்சைகளிடம் குதிரை பேரத்தில் அதிமுகவினர் ஈடுபட்டுள்ளனர். ஜெயங்கொண்டத்தில் நடந்துள்ளது போல், பல இடங்களில் பேரத்துக்கு மசியாதவர்கள் கடத்தப்பட வாய்ப்புள்ளது. எனவே இதையாவது தடுக்க மாநில தேர்தல் ஆணையம் உரியநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன.