2019ல் ஆந்திரா, சிக்கிம், ஒடிசா, அரியானா, மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட்டில் பின்னடைவு பாஜக-வுக்கு 2020ல் காத்திருக்கும் கசப்பு கசாயம்
1/4/2025 2:25:56 PM
* இந்தாண்டில் டெல்லி, பீகார் தேர்தல்; 73 ராஜ்ய சபா எம்பி தேர்தல்
* 2021ல் தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல்
புதுடெல்லி: கடந்த 2019ல் நடந்த பேரவை தேர்தல்களில் ஆந்திரா, சிக்கிம், ஒடிசா, அரியானா, மகாராஷ்டிரா, ஜார்க்கண்டில் பின்னடைவை சந்தித்த பாஜக, 2020ல் மேலும் பின்னடைவை சந்திக்கும் வகையில் டெல்லி, பீகார் சட்டப்பேரவை தேர்தல் மற்றும் 73 ராஜ்ய சபா எம்பிக்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. தொடர்ந்து 2021ல் தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் சட்டப் பேரவை தேர்தல் நடக்கவுள்ளதால், பாஜகவுக்கு அடுத்தடுத்த ஆண்டுகள் கசப்பு கசாயமாக இருக்குமா? என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. 2019ல் நடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக 303 இடங்களை வென்று பிரதமர் மோடி தொடர்ந்து இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்றார். பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 350 இடங்களை கைப்பற்றியது. கடந்தாண்டை பொறுத்தவரை, அருணாச்சல பிரதேசத்தில் பாஜக கட்சி ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது. ஆனால், நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற ஆந்திரா, சிக்கிம் மற்றும் ஒடிசாவில் பாஜகவுக்கு பின்னடைவே ஏற்பட்டது. அரியானாவில் பெரும்பான்மையைப் பெற பாஜக தவறிவிட்டது. துஷ்யந்த் சவுதாலாவின் ஜனநாயக ஜனதா கட்சியுடன் (ஜேஜேபி) இணைந்து ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது.
மகாராஷ்டிராவில் பாஜகவின் நீண்டகால நட்பு கட்சியான சிவசேனாவுடன் பெரும்பான்மையைப் பெற்றிருந்தாலும், முதல்வரின் நாற்காலியைப் பகிர்வதில் ஏற்பட்ட முட்டல் ேமாதலால், கூட்டணியில் முறிவு ஏற்பட்டு ஆட்சியை பாஜக பறிகொடுத்தது. டிசம்பரில் நடந்த தேர்தலில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜே.எம்.எம்) - காங்கிரஸ் - ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்.ஜே.டி) கூட்டணி ஜார்க்கண்டில் ஆட்சியை பாஜகவிடம் இருந்து கைப்பற்றியது. ஜே.எம்.எம் தலைவர் ஹேமந்த் சோரன் முதல்வரானார்.
கடந்தாண்டின் இரண்டாம் பாதியில் ஆட்சியை பிடித்த மத்திய பாஜக அரசு, ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து, முத்தலாக் சட்டம், குடியுரிமை திருத்தச் சட்டம் போன்ற முக்கிய முடிவுகளால், அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து வருகிறது. தொடர்ந்து 2020ம் ஆண்டில், எந்த மாதிரியான சவால்களை பாஜக எதிர்கொள்ள உள்ளது என்பது, இன்று தேசிய அரசியலில் பரபரப்பாக பேசப்படுகிறது. அந்த வகையில், டெல்லி, பீகார் சட்டப்பேரவை தேர்தல், மாநிலங்களவை தேர்தல் போன்றவை அரசியல் ரீதியான முக்கியத்துவம் பெறுகின்றன.
டெல்லி பேரவை தேர்தல்டெல்லியை பொறுத்தவரை 2014ம் ஆண்டில், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி சட்டப்பேரவை தேர்தலில் 70 இடங்களில் 67 இடங்களை கைப்பற்றியது. முதல்வர் கெஜ்ரிவாலின் ஆட்சி முடிவுபெறும் நிலையில், ஜனவரி - பிப்ரவரி மாதத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடப்பதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் முடுக்கிவிட்டுள்ளது. தேர்தல் ஆணையம் அட்டவணையை இன்னும் அறிவிக்கவில்லை என்றாலும், கட்சிகளின் பிரசாரம் ஏற்கனவே தொடங்கிவிட்டது.
பாஜகவின் பிரசாரத்தை கடந்த டிச. 22ம் தேதி பிரதமர் மோடி ராம்லீலா மைதானத்தில் தொடங்கி வைத்தார். ஆம் ஆத்மி கட்சி தனது பிரசாரத்தில், ‘கடந்த ஐந்து ஆண்டுகளில் நன்றாக ஆட்சி சென்றது; கெஜ்ரிவாலுக்கு வாக்களியுங்கள்’ என்ற முழக்கத்தை முன்வைத்து பிரசாரத்தை மேற்கொண்டுள்ளது. காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை, தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணிகளுக்காக நிர்வாகிகளை நியமித்து, ேதர்தல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது. அதனால், டெல்லியில் மீண்டும் ஆம்ஆத்மி கைப்பற்றுமா அல்லது பாஜக அல்லது காங்கிரஸ் கட்சியா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
பீகார் பேரவை தேர்தல் பீகாரில் சட்டமன்றத் தேர்தலுக்கு ஏறக்குறைய 10 மாதங்கள் உள்ள நிலையில், அங்குள்ள அரசியல் நகர்வுகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் துணை தலைவராக உள்ள பிரசாத் கிஷோர் (தேசிய அரசியலில் அரசியர் நிபுணர் என்று கூறுகின்றனர்; தற்போது டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தேர்தல் ஆலோசகராக உள்ளார்) இந்த தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு கூட்டணியில் அதிக சீட் ஒதுக்க வேண்டும் என்று, பாஜகவுக்கு ‘செக்’ வைத்துள்ளார். மக்களவை தேர்தலில் பாஜகவும் ஐக்கிய ஜனதா தளமும் சம எண்ணிக்கையிலான இடங்களுக்கு போட்டியிட்ட நிலையில், இரு கட்சிகளும் இப்போது மாநில அளவிலான கூட்டணியில் தனி ஆதிக்கம் செலுத்தும் கட்சியாக மாற போட்டியிடுகின்றனர்.மாநிலத்தில் முதல்வர் நிதிஷ் குமாரின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியை தக்க வைக்குமா? அல்லது ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணி ஆட்சியை கைப்பற்றுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், டெல்லி, பீகார் சட்டப்பேரவை நிலவரம் இவ்வாறு இருக்க, மக்களவையில் பாஜக வலுவான பெரும்பான்மையைப் பெற்றிருந்தாலும், மாநிலங்களவையில் அக்கட்சி கூட்டணிக்கு பெரும்பான்மை பலம் இல்லை. அதனால், மாநிலங்களவையில் குறிப்பிட்ட சர்ச்சைக்குரிய மசோதாக்களை நிறைவேற்ற முடியாமல் பாஜக திணறி வருகிறது.
சபையில் முக்கிய சட்டங்களை இயற்ற, பாஜக இதுவரை தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அப்பாற்பட்ட கட்சிகளின் ஆதரவை பெற்று நிறைவேற்றி உள்ளது. நிலங்களவையை பொறுத்தவரை பாஜகவின் எண்ணிக்கை 2014ம் ஆண்டில் இருந்து படிப்படியாக உயர்ந்துள்ளது.73 எம்பிக்கள் தேர்தல்இந்தாண்டில் (2020ல்) 73 இடங்களுக்கான மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் நான்கு கட்டங்களாக, பிப்ரவரி, ஜூன், ஜூலை மற்றும் நவம்பர் மாதங்களில் நடக்க உள்ளது.இந்த தேர்தல்கள் ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், அசாம், பீகார், சட்டீஸ்கர், குஜராத், அரியானா, இமாச்சல பிரதேசம், ஜார்க்கண்ட், கர்நாடகா, மகாராஷ்டிரா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், ஒடிசா, தமிழ்நாடு, ராஜஸ்தான், உத்தரபிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் நடக்கவுள்ளது. இப்போது யூனியன் பிரதேசமாக இருக்கும் ஜம்மு-காஷ்மீர் அதன் சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ளவில்லை. அதனால், அது எப்போது நடக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. இது தொடர்பான இறுதி முடிவு சில மாதங்களுக்குப் பிறகு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு காரணமாக அங்குள்ள சட்டமன்றத் தொகுதிகளின் எல்லைகளை மீண்டும் வரையறை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
மேற்குவங்கம், அசாம், தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் 2021 ஏப்ரல் - மே மாதங்களில் நடந்தாலும் கூட, இந்தாண்டின் இறுதிகட்டத்தில் தேர்தலுக்கான அரசியல் நடவடிக்கைகள் ெதாடங்கிவிடும். டெல்லி, பீகார் தேர்தல்களை தொடர்ந்து 5 மாநில சட்டப்ேபரவை தேர்தல்களும் தேசிய அளவில் அரசியல் முக்கியத்துவம் பெறவுள்ளன. 250 உறுப்பினர்களைக் கொண்ட மாநிலங்களவையில் ஆளும் பாஜகவுக்கு 83 உறுப்பினர்களும், காங்கிரஸ் கட்சிக்கு 46 உறுப்பினர்களும் உள்ளனர். இவர்களில், பாஜகவைச் சேர்ந்த 18 பேர், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 17 பேர் உள்பட 69 பேரின் பதவிக்காலம் இந்தாண்டு முடிவடையவுள்ளது.
இதுதவிர ஏற்கெனவே 4 இடங்கள் காலியாக உள்ளன. அதனால், இந்தாண்டில் மாநிலங்களவைக்கு மொத்தம் 73 பேர் புதிதாகத் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில், அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் 10 பேர், மகாராஷ்டிராவில் 7 பேர், தமிழகத்தில் 6 பேர், மேற்குவங்கம் மற்றும் பீகாரில் தலா 5 பேர், ஆந்திர பிரதேசம், குஜராத், கர்நாடகா, ஒடிசாவில் தலா 4 பேர், ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் தலா 3 பேர், தெலங்கானா, அரியானா, ஜார்க்கண்ட், சட்டீஸ்கரில் தலா 2 பேர் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
பிரபலங்கள் யார்?இதேபோல், உத்தரகாண்ட், இமாசல பிரதேசம், மிசோரம், மேகாலயா, மணிப்பூர், அருணாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலா ஓர் உறுப்பினர் இந்த ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். பதவிகாலம் முடியும் பிரபலங்கள் பட்டியலில், பிரபல வழக்கறிஞர் கே.டி.எஸ்.துளசி, மத்திய அமைச்சர்கள் ஹர்தீப் சிங் புரி, ராம்தாஸ் அதாவலே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங், முன்னாள் மத்திய இணையமைச்சர் விஜய் கோயல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். தமிழகத்தில் 6 எம்.பிதமிழகத்தின் சார்பில் மாநிலங்களவைக்கு 18 மாநிலங்களவை உறுப்பினர் தேர்வு செய்யப்படும் நிலையில், 2 ஏப்ரல் 2014 முதல் 1 ஏப்ரல் 2020 வரை பதவியில் இருந்த 6 எம்பிக்களுக்கான தேர்தல் பிப்ரவரி மாதம் வாக்கில் நடைபெறவுள்ளது. அந்த பட்டியலில் பதவிகாலம் முடியும் எம்பிக்களில் டி.கே.ரங்கராஜன் (சிபிஎம்). சசிகலா புஷ்பா (அதிமுக), கே.செல்வராஜ் (அதிமுக), திருச்சி சிவா(திமுக), விஜிலா சத்யானந்த் (அதிமுக), எஸ்.முத்துக்கருப்பன் (அதிமுக) ஆகிய 6 பேருக்கான இடங்களுக்கு புதியதாக எம்பிக்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எப்படியாகிலும், ‘நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு எடுத்து செல்ல, மத்திய அரசு தரும் கசப்பான கசாயத்தை மக்கள் சகித்துக் கொள்ள வேண்டும்’ என்று பிரதமர் மோடி தெரிவித்தாலும் கூட, அக்கட்சியின் தேர்தல் முடிவுகள் பின்னோக்கியே செல்வதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். அதுவும், 2019ம் ஆண்டைக் காட்டிலும் 2020ம் ஆண்டு டெல்லி, பீகார் பேரவை தேர்தல், 73 மாநிலங்களை எம்பிக்கள் தேர்தல், 2021ல் வருகிற 5 மாநில பேரவை தேர்தல்கள் பாஜகவுக்கு கசப்பு கசாயமாக இருக்குமா? அல்லது இனிப்பு கசாயமாக இருக்குமா? என்பது தேர்தல் முடிவுகளை பொறுத்தே அமையவுள்ளது.