2 டிஐஜி, 14 எஸ்பிக்கள் உட்பட 19 சிபிஐ மூத்த அதிகாரிகள் இடமாற்றம்
1/3/2025 2:10:00 PM
புதுடெல்லி: சிபிஐ ஏஜென்சியில் பணியாற்றும் 2 டிஐஜி, 14 எஸ்பி உட்பட 19 மூத்த அதிகாரிகளை, சிபிஐ இயக்குனர் நேற்று அதிரடியாக இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். சிபிஐ ஏஜென்சி சமீபத்தில் இடமாற்றம் குறித்த தனது கொள்கையை புதுப்பித்துள்ளது, அதன்படி, எந்த அதிகாரியும் ஒரு குறிப்பிட்ட கிளையில் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக பணியில் இருக்க மாட்டார் என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சிபிஐ இயக்குனர் ரிஷி குமார் சுக்லா, சிபிஐ அமைப்பின் மூத்த அதிகாரிகளை இடமாற்றம் செய்து அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். அதன்படி இரண்டு டிஐஜி, 14 எஸ்பி-க்கள் உட்பட 19 மூத்த சிபிஐ அதிகாரிகளை இடமாற்றம் செய்துள்ளார்.
முக்கிய இடமாற்றங்களில் விவேக் பிரியதர்ஷி (ஏ.ஐ.ஜி கொள்கை) ஜெய்ப்பூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். பிரியதர்ஷியின் இடத்தில் எஸ்.பி. பார்த்தா முகர்ஜி இருப்பார். இவர், கொல்கத்தாவை தளமாகக் கொண்ட பொருளாதார குற்றங்கள் - 4 மற்றும் சிட் ஃபண்ட் வழக்குகளை விசாரித்து வந்தார். சந்தா கோச்சர் வழக்கை 2019 ஜனவரி வரை விசாரித்த எஸ்.பி. சுதான்ஷு தார் மிஸ்ரா, அப்போதைய இடைக்கால சிபிஐ இயக்குனர் எம்.நாகேஸ்வர ராவ் வெளியேற்றப்படுவதற்கு முன்னர், டெல்லியில் உள்ள பொருளாதார குற்றங்கள் -2 பிரிவில் இப்போது பணியமர்த்தப்பட்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் முசாபர்பூர் இல்லத்தில் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை தொடர்பான விசாரணையை முன்னெடுத்து விசாரித்து வந்த துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் அபய் சிங், டெல்லியில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இவர், தொடர்ந்து பாலியல் தொடர்பான விசாரணையை மேற்பார்வையிடுவார் என்று கூறப்பட்டுள்ளது. ஊழல் தடுப்பு பிரிவுக்கு தலைமை தாங்கும் டி.ஐ.ஜி நிதின் டீப் பிளாகனுக்கு ஊழல் தடுப்பு பிரிவு - 5 கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.
பொருளாதார குற்றங்கள் - 3 பிரிவின் எஸ்.பி. விஜயேந்திர பிடாரி, இன்டர்போல் ஒருங்கிணைப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். மேலும் அவர், நிறுவனத்தின் அமைப்புகள் பிரிவையும் கவனிப்பார். அகஸ்டா வெஸ்ட்லேண்ட், விஜய் மல்லையா விசாரிக்கும் குழுவில் அங்கம் வகிக்கும் கிரண், ஏசி-4 அலகுக்கு மாற்றப்பட்டுள்ளார். எஸ்பிக்கள் பட்டியலில் அபிஷேக் துலார், அனூப் டி.மேத்யூ, ராஜ்பால் மீனா, ஏ.ஷியாஸ், ஏ.ஜெயதேவன், சுதான்ஷு தார் மிஸ்ரா, பி.கே.மஞ்சி, ஜெய் நாராயண் ராணா, சந்தானு கார் மற்றும் பி.கே.பாண்டே ஆகியோர் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர். கூடுதல் எஸ்.பி.க்கள் சஞ்சய் குமார் சின்ஹா, எஸ்.டி.மிஸ்ரா மற்றும் கஜானந்த் பைர்வா ஆகியோரும் வெவ்வேறு பிரிவுக்கு இடம் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.