ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு திருப்பதி கோயிலில் அனைத்து சேவைகளும் ரத்து
12/31/2019 4:49:19 PM
திருமலை: ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை வரை அனைத்து சேவைகளையும் முழுமையாக ரத்து செய்திருப்பதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசி மற்றும் ஆங்கில புத்தாண்டுக்கான ஏற்பாடுகள் குறித்து திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் கூடுதல் செயல் அலுவலர் தர்மாரெட்டி நேற்று தேவஸ்தான விஜிலென்ஸ், போலீசார் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆங்கில புத்தாண்டு, வைகுண்ட ஏகாதசியையொட்டி நேற்று(30ம்தேதி) முதல் நாளை (1ம்தேதி) வரை சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் வசதிக்காக அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
ஒரு வயது குழந்தையுடன் பெற்றோர் செல்லும் தரிசனம், மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கான சிறப்பு தரிசனம், நன்கொடையாளர்களுக்கான முன்னுரிமை தரிசனம், ஆதார் அட்டை மூலம் வழங்கப்படும் சர்வ தரிசனம், மலைப்பாதையில் நடந்து வரும் பக்தர்களுக்கான திவ்யதரிசனம், அங்கபிரதட்சணை சேவை என அனைத்து சேவைகளும் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இதேபோல் வைகுண்ட ஏகாதசி மற்றும் துவாதசியையொட்டி வரும் 5ம்தேதி முதல் 7ம் தேதி வரை அனைத்து முன்னுரிமை தரிசனங்களும், (ஆர்ஜித சேவை) கட்டண சேவைகள், சர்வ தரிசனம் (நேரம் ஒதுக்கீடு), திவ்யதரிசனம், அங்கபிரதட்சணம் ஆகியவை ரத்து செய்யப்படுகிறது.
ஏற்கனவே 7ம் தேதி துவாதசிக்கான ரூ.300 சிறப்பு தரிசனத்திற்கான 5 ஆயிரம் டிக்கெட்டுகள் ஆன்லைனில் பக்தர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. வைகுண்ட ஏகாதசியையொட்டி அதிகாலை 2 மணி முதல் முக்கிய பிரமுகர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். அதன்பிறகு சாதாரண பக்தர்கள்அதிகாலை 5 மணி முதல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். சுவாமி தரிசனத்திற்காக வரும் பக்தர்களுக்காக நான்கு மாட வீதி, நாராயணகிரி தோட்டம் முதல் கல்யாண மேடை வரை சிறப்பு வரிசைகள் ஏற்பாடு செய்யப்பட்டு பக்தர்களுக்கு சுழற்சி முறையில் அன்ன பிரசாதம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.