இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.4 கோடி கஞ்சா பறிமுதல்
12/31/2019 4:36:05 PM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே எஸ்.பி.பட்டினத்தில் இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.4 கோடி மதிப்புள்ள கஞ்சாவை சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தனர். தப்பியோடிய கடத்தல் கும்பலை போலீசார் தீவிரமாக தேடுகின்றனர். ராமநாதபுரம் அருகே உள்ள எஸ்.பி.பட்டினம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்த இருப்பதாக மண்டபம் சுங்கத்துறை கண்காணிப்பாளர் ஜோசப் ஜெயராஜுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் இன்று அதிகாலை எஸ்.பி.பட்டிணம் கடற்கரை பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். கடற்கரை பகுதி முழுவதையும் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். இதையறிந்த கடத்தல்காரர்கள், கஞ்சாவை கடற்கரையில் போட்டு விட்டு தப்பியோடி விட்டனர். கடற்கரையில் சாக்கு மூட்டைகளில் 11 பண்டல்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 380 கிலோ கஞ்சாவை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை ராமநாதபுரத்தில் உள்ள சுங்கத்துறை அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் போலீஸ் செக் போஸ்ட்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு, கஞ்சா கடத்திய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். சுங்கத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘எஸ்.பி.பட்டினம் கடற்கரையில் 380 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.4 கோடி. கஞ்சாவை கடத்தி வந்தவர்களை தீவிரமாக தேடி வருகிறோம்’’ என்றனர். கடந்த 25ம் தேதி இலங்கைக்கு கடத்துவதற்காக ராமேஸ்வரம் சிவகாமி நகர் பகுதியில் காரில் எடுத்து வந்த 80 கிலோ கஞ்சாவை சிறப்பு படை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஒரு வார இடைவெளியில் தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் மீண்டும் 380 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ராமேஸ்வரம் தீவுப்பகுதி மற்றும் ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இலங்கைக்கு கஞ்சா கடத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருவது, மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.