மகாராஷ்டிர மாநிலத்தில் நெகிழ்ச்சி அயர்லாந்து பிரதமர் இந்தியா வருகை: தந்தை பிறந்த ஊரில் உற்சாகம்
12/30/2019 3:50:46 PM
மும்பை: இந்தியா வந்துள்ள அயர்லாந்து பிரதமர், மகாராஷ்டிராவில் உள்ள தனது தந்தையின் கிராமத்துக்குச் சென்றார். அவரை, அக்கிராமத்தினர் உற்சாகமாக வரவேற்றனர். மகாராஷ்டிரா மாநிலம் சிந்து துர்க் மாவட்டத்தில் உள்ள வராட் கிராமத்தைச் சேர்ந்தவர் அசோக் வராட்கர். மருத்துவரான இவர் 1960ம் ஆண்டு அயர்லாந்தில் குடியேறினார். அசோக்கின் மகனான லியோ வராட்கர் தற்போது அயர்லாந்து நாட்டின் பிரதமராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், இந்தியா வந்த அவர், சிந்து துர்க் மாவட்டத்தில் குடும்பத்தினருடன் தனது தந்தை வசித்த கிராமத்துக்குச் சென்று அங்குள்ள கோயிலில் வழிபட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ‘‘மூன்று தலைமுறையைச் சேர்ந்தவர்கள் இங்கு வாழ்ந்துள்ளனர். தந்தையின் சொந்த ஊருக்கு வந்துள்ளது சிறப்பான தருணம்’’ என்றார். அயர்லாந்து பிரதமர், மகாராஷ்டிராவில் உள்ள தனது தந்தையின் கிராமத்துக்குச் சென்ற சம்பவம், அம்மாநில மக்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.