பெண் டாக்டர் கொலை வழக்கில் என்கவுன்டர்: மனித உரிமைகள் ஆணையத்தில் விசாரணை அறிக்கை ஒப்படைப்பு
12/12/2025 3:03:03 PM
திருமலை: தெலங்கானாவில் கால்நடை மருத்துவர் டிஷாவை எரித்துக்கொன்ற குற்றவாளிகளை என்கவுன்டர் செய்தது குறித்து நடத்திய விசாரணை அறிக்கையை மனித உரிமை ஆணையத்தில் இன்று அதன் பிரதிநிதிகள் ஒப்படைக்கின்றனர்.
தெலங்கானா மாநிலம் செம்ஷாபாத்தை சேர்ந்த கால்நடை டாக்டர் டிஷாவை பலாத்காரம் செய்து பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற முகமதுஆரீப், சிவா, நவீன், சென்னகேசவலு ஆகிய 4 பேரை போலீசார் என்கவுன்டர் செய்தனர். இதுகுறித்து ஊடக காட்சிகளின் ஆதாரப்படி மனித உரிமை ஆணையம் விசாரணைக்கு உத்தரவிட்டது. அதன்படி டெல்லி மனித உரிமை ஆணைய பிரதிநிதிகள் 7 பேர் கொண்ட குழுவினர், கடந்த 5 நாட்களாக விசாரணை நடத்தினர்.
இதில் என்கவுன்டர் நடந்த சட்டான்பள்ளி மேம்பாலம், டிஷா பலாத்காரம் செய்யப்பட்ட தொண்டபள்ளி சுங்கச்சாவடி, எரித்துக்கொல்லப்பட்ட இடத்தை ஆய்வு செய்தனர். மேலும் போலீசார், பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள், என்கவுன்டரில் பலியானோரின் பெற்ேறார், உறவினர்களிடம் விசாரணை நடத்தி வாக்குமூலமாக சேகரித்தனர். தடயவியல் ஆய்வும் மேற்கொண்டனர்.
அதேபோல் என்கவுன்டர் சம்பவத்தின்போது காயம் அடைந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 2 போலீஸ்காரர்களையும் சந்தித்து விவரங்களை சேகரித்தனர். இதையடுத்து 5 நாட்கள் நடந்த விசாரணை அறிக்கையை தயார் செய்தனர். பின்னர் விசாரணை முடிந்து மனித உரிமைகள் ஆணைய குழுவினர் நேற்று டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர். இந்த அறிக்கை இன்று மனித உரிமைகள் ஆணையத்தில் ஒப்படைக்கப்படுகிறது. தற்போது என்கவுன்டர் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், வழக்கிற்கு தேவைப்படும் பட்சத்தில், இந்த அறிக்கையை மனித உரிமைகள் ஆணையம் சமர்ப்பிக்கும் என கூறப்படுகிறது.