விளாத்திகுளம் ஜிஹெச்சில் முதல் திருநங்கை டூட்டியில் சேர்ந்தார்
12/11/2025 3:50:11 PM
விளாத்திகுளம்: தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே உள்ள சேர்வைக்காரன் மடம் கிராமத்தைச் சேர்ந்த பார்வையற்றவரான ரத்தினபாண்டி, தேன்மொழியின் மகன் அன்புராஜ். பள்ளிப் பருவத்தில் 13வது வயதில் அன்புராஜின் உடலில் திடீர் மாற்றங்கள் ஏற்பட்டு திருநங்கையாக மாறியதால் தனது பெயரை அன்பு ரூபி என மாற்றிக் கொண்டார். சாயர்புரம் போப் நினைவு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 முடித்ததும் காவல் கிணறு ராஜா செவிலியர் கல்லூரியில் பிஎஸ்சி செவிலியர் படித்து முடித்தார். இதன்பிறகு தூத்துக்குடியில் உள்ள திரு இருதய மருத்துவமனையில் மூன்றரை ஆண்டுகள் செவிலியராக பணியாற்றினார். அப்போது மேலாண்மையில் எம்பிஏ படிப்பை தொலைதூரக் கல்விமூலம் இந்த ஆண்டு நிறைவு செய்தார். தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் சார்பில், கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற செவிலியர் பணிக்கான தேர்வில் அன்பு ரூபி தேர்ச்சி பெற்றார்.
இதையடுத்து கடந்த 2ம் தேதி சென்னையில் நடைபெற்ற விழாவில் அன்பு ரூபிக்கு செவிலியர் பணிக்கான நியமன ஆணையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். அவருக்கு திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இதன் மூலம் தமிழகத்தின் அரசு செவிலியராக பணி நியமனம் பெற்றுள்ள முதல் திருநங்கை என்ற பெருமையை பெற்ற அன்பு ரூபி, தூத்துக்குடி மாவட்டத்திலேயே தனக்கு பணி வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் அவருக்கு பணி வழங்கப்பட்டது. அவர் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.