இந்தாண்டு முதல் வழங்க முடிவு: அங்கன்வாடி மையத்தில் படிக்கும் குழந்தைகளுக்கு கலர்புல் சீருடை
12/11/2025 3:47:52 PM
வேலூர்: அரசின் அங்கன்வாடி மையத்தில் படிக்கும் குழந்தைகளுக்கு இந்தாண்டு முதல் வண்ண சீருடை வழங்கப்பட உள்ளது. தமிழகம் முழுவதும் பள்ளிகளுடன் இணைந்த அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டன. இந்த குழந்தைகளுக்கு இலவசமாக சீருடைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், அங்கன்வாடி மையங்களுக்கு குழந்தைகள் வருவதை ஊக்கப்படுத்தும் விதமாக வண்ண சீருடைகள் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி முதல்கட்டமாக தமிழகத்தில் 17 மாவட்டங்களில் 243 ஒன்றியங்களில் 6.25 லட்சம் ஆண் குழந்தைகள், 5.98 லட்சம் பெண் குழந்தைகள் என மொத்தம் 12.23 லட்சம் குழந்தைகளுக்கு இந்த ஆண்டு முதல் வண்ண சீருடைகள் இரண்டு செட்கள் வழங்கப்படுகின்றன.
ஆண் குழந்தைகளுக்கு டிரவுசரும், சட்டையும், பெண் குழந்தைகளுக்கு கவுனும் வழங்கப்படும். இதற்காக ₹16.04 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. ஒப்பந்தப்புள்ளி கோர வரும் 30ம்தேதி கடைசி நாள் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனால் அடுத்த ஏப்ரல் அல்லது மே மாதங்கள் முதல் கட்டமாக 12.23 லட்சம் அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு வண்ண சீருடைகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அங்கன்வாடி பணியாளர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.