சுவர் இடிந்து விழுந்து 17 பேர் பலி: துணிக்கடை உரிமையாளர் ஜாமீன் மனு தள்ளுபடி
12/11/2025 3:47:20 PM
கோவை: மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்த வழக்கில் துணிக்கடை அதிபரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்த நடூர் கிராமத்தில் கடந்த வாரம் 20 அடி உயரத்திற்கு கட்டப்பட்டிருந்த சுற்றுச்சுவர் இடிந்து வீடுகள் மீது விழுந்ததில் மாணவிகள் உள்பட 17 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து துணிக்கடை அதிபர் சிவசுப்பிரமணியத்தை கைது செய்தனர். இதையடுத்து கோவை மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், ஜாமீன் கேட்டு கோவை மாவட்ட நீதிமன்றத்தில் சிவசுப்பிரமணியன் மனுத்தாக்கல் செய்தார். இம்மனு மாவட்ட முதன்மை நீதிபதி சக்திவேல் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தபோது உரிமையாளர் சிவசுப்பிரமணியன் தரப்பு வக்கீல் வாதிடுகையில், ‘’சிறையில் உள்ள சிவசுப்பிரமணியத்தின் உடல்நிலை மோசமாக உள்ளது.
எனவே அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்’ என்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு தரப்பு வக்கீல், ‘’சம்பவ பகுதியில் போதிய அஸ்திவாரம் இல்லாமல் 20 அடி வரை சுவர் எழுப்பியது தவறு. அஜாக்கிரதையால்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது, உடல்நிலை மோசமாக உள்ளது என்றால் அரசு மருத்துவமனையில் அனைத்து விதமான வசதிகளும் உள்ளது, அதனால் அவரை அங்ேகயே அனுமதித்து சிகிச்சை அளிக்கலாம். ஜாமீன் வழங்கக்கூடாது’’ என்றார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட மாவட்ட முதன்மை நீதிபதி சக்திவேல், துணிக்கடை உரிமையாளரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.