கணவனுடன் ஏற்பட்ட ஆத்திரத்தில் குழந்தையை குப்பை தொட்டியில் வீசிய தாயை தேடும் போலீசார்
12/11/2025 3:46:44 PM
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் நேற்று அதிகாலை 5 மணியளவில் ரயில் நிலையம் அருகே உள்ள குப்பைத் தொட்டியில் 10 மாத பெண்குழந்தை கிடந்தது. இக்குழந்தையை நாடோடிக் குடும்பத்தை சேர்ந்தவர்கள் எடுத்து வைத்திருந்தனர். இதைப்பார்த்த அதே பகுதியை சேர்ந்த செல்வி(55) என்பவர் தங்கள் குடும்பத்திற்கு குழந்தை இல்லை, எனவே குழந்தையை கொடுங்கள் என கேட்டுள்ளார். இதன்காரணமாக அவர்களிடையே கடும் தகராறு ஏற்பட்டது. இதுபற்றி அறிந்ததும் ஜோலார்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து குழந்தையை மீட்டு திருப்பத்தூரில் உள்ள தொண்டு நிறுவனத்தில் ஒப்படைத்தனர். இதன்பிறகு குழந்தைகள் நலக்குழு சேர்மேன் சிவ கலைவாணன்,மாவட்ட நன்னடத்தை அலுவலர் ரமேஷ் மற்றும் மாவட்ட சமூக நல அலுவலர் முருகேஸ்வரி ஆகியோர் கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைக்க வந்தனர்.
அப்போது, ஆலங்காயம் போலீஸ் நிலையத்தில் இருந்து தொலைபேசி தகவலில், ‘’ குப்பை தொட்டியில் வீசப்பட்ட குழந்தைக்கு மீட்க தாய், தந்தை வந்துள்ளார்’ என்று தெரிவித்தனர். இதன்பிறகு கலெக்டர் சிவன்அருள் விசாரணை மேற்கொண்டதில், ஆலங்காயம் காவல் நிலையத்தில் குழந்தையின் தாத்தா, பாட்டி புகார் அளித்தது தெரிந்தது. அதில் அவர்கள் கூறியிருப்பதாவது: திருப்பத்தூர் மாவட்டம், மேல் நிம்மியம்பட்டு கிராமத்தை சேர்ந்த பிரியா(28) என்பவருக்கும், ஆலங்காயம் அருகே உள்ள புதுபூங்குளம் கிராமத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி ஆனந்தன்(38) என்பவருக்கும் 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஆனந்தனுக்கு தனது மனைவி மீது சந்தேகம் ஏற்பட்டதால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. பிரிந்துவாழ்ந்த அவர்களை பெரியவர்கள் முன்னிலையில் சேர்த்துவைத்தனர். கடந்த 10 மாதத்திற்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது.
நேற்று முன்தினம் ஆனந்தனுக்கும், பிரியாவுக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டதால் மனமுடைந்த பிரியா, தனது 10 மாத பெண் குழந்தையை எடுத்துக்கொண்டு ஜோலார்பேட்டை ரயில் நிலையம் அருகே உள்ள குப்பைத் தொட்டியில் வீசிவிட்டு சென்றார் என்று இதுவரை தெரியவில்லை. குழந்தை குறித்து செய்திதாள், சமூக வலைதளங்களில் போட்டோவுடன் செய்தி வெளியானதால் இதைப்பார்த்த பிரியாவின் தந்தை குழந்தையும், தாயும் காணவில்லை என்று ஆலங்காயம் காவல் நிலையத்தில் நேற்று மாலை புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரியாவை இன்று 2வது நாளாக தேடி வருகின்றனர். இதனிடையே எஸ்ஆர்டிபிஎஸ் தொண்டு நிறுவன காப்பகத்தில் உள்ள குழந்தையை தங்களிடம் தருமாறு குழந்தையின் தாத்தா, பாட்டி கோரிக்கை வைத்தனர். ஆனால் கலெக்டர் உத்தரவுப்படி விசாரணை நடத்திய பிறகுதான் குழந்தையை தரமுடியும் என்று தெரிவித்தனர்.