போலீஸ்காரர்போல் பேசி நெட்டில் ஆபாச படம் பார்த்த கல்லூரி மாணவருக்கு மிரட்டல்: நண்பர் மீது 3 பிரிவில் வழக்கு
12/11/2025 3:45:57 PM
நாங்குநேரி: இன்டர்நெட்டில் ஆபாச படம் பார்த்த கல்லூரி மாணவரை போலீஸ் போல் பேசி மிரட்டி வாட்ஸ் அப்பில் பதிவிட்ட நண்பர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் மூன்றடைப்பில் இன்டர்நெட் மூலம் ஆபாச படம் பார்த்த ஒருவரை போலீஸ்காரர் ஒருவர் மிரட்டி விசாரிப்பது போன்ற பதிவு கடந்த சில நாட்களுக்கு முன் சமூகவலைதளங்களில் பரவியது. இந்த பதிவை கேட்ட நெல்லை எஸ்பி ஓம் பிரகாஷ் மீனா இதுகுறித்து விசாரிக்க உத்தரவிட்டார்.
இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், நெல்லையில் இதுபோன்ற குற்ற வழக்கு விசாரணை ஏதும் நடைபெறவில்லை என்றும், போலீசார் பேசுவது போல் ஏமாற்றி வாட்ஸ்அப்பில் பதிவிட்டுள்ளனர் என்றும் தெரிவித்தனர்.
மிரட்டப்பட்ட வாலிபர் மூன்றடைப்பைச் சேர்ந்த கல்லூரி மாணவர் என்பதும் அவரை மிரட்டியது அதே ஊரைச் சேர்ந்த அவரது நண்பர் கார்த்திக் (27) என்பதும் தெரியவந்தது. மூன்றடைப்பு இன்ஸ்பெக்டர் சபாபதி, கல்லூரி மாணவரிடம் நடத்திய விசாரணையில், ‘’கார்த்திக் பெங்களூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருவதும் தெரியவந்தது. இதனையடுத்து தன்னிடம் போலீசார் பேசுவதுபோல பேசி மிரட்டி அவமானபடுத்தி வாட்ஸ் அப்பில் பதிவிட்ட கார்த்திக் மீது மாணவர் புகார் அளித்தார். இதன்படி கார்த்திக் மீது ஏமாற்றுதல், மிரட்டல், இணையதள குற்றப்பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.