செங்கல்பட்டு அருகே மர்ம பொருள் வெடித்த விவகாரம்: விவசாயி வீட்டில் குவியல் குவியலாக ராக்கெட் லாஞ்சர் பறிமுதல்.... போலீசார் தீவிர விசாரணை
12/11/2025 2:42:17 PM
செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே மர்ம பொருள் வெடித்த விவகாரம் தொடர்பாக விவசாயி வீட்டில் சோதனை நடத்தியபோது, குவியல் குவியலாக ராக்கெட் லாஞ்சர் பறிமுதல் செய்யப்பட்டது. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். செங்கல்பட்டு அடுத்த அனுமந்தபுரத்தில் ராணுவ துப்பாக்கி பயிற்சி மையம் கடந்த 20 வருடங்களாக இயங்கி வருகிறது. இங்கு, ராணுவத்தினர், ரயில்வே துறை, தமிழக காவல் துறை உள்ளிட்ட உயரதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பயிற்சியின்போது பயன்படுத்தப்பட்ட வெடிபொருட்கள் மற்றும் உதிரிபாகங்கள் அனுமந்தபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஆங்காங்கே விழுந்து கிடக்கும். கடந்த 2ம் தேதி முதல் 6ம் தேதி வரை துப்பாக்கி பயிற்சி நடந்தது.
இந்நிலையில், ேநற்று மதியம் அனுமந்தபுரம் அன்னை இந்திரா நகர் பகுதியை சேர்ந்த விவசாயி ராமகிருஷ்ணன் (47), பயிற்சி மையத்தில் வெடிக்காத ஒரு வெடி பொருளை பைக்கில் எடுத்து கொண்டு புளியந்தோப்பு தெரு வழியாக சென்றபோது, கீழே விழுந்து பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் ராமகிருஷ்ணனுக்கு வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் அப்பகுதியில் வீட்டின் வாசலில் துணி இஸ்திரி செய்து கொண்டிருந்த கோவிந்தம்மாள் (60) என்பவருக்கும் காயம் ஏற்பட்டது. அப்பகுதியில் ஓட்டு வீடு அதிர்வில் சேதமானது. இரும்பு மின் கம்பத்தில் பெரிய துளை விழுந்தது. சிமெண்ட் ரோட்டில் விரிசல் ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த மறைமலைநகர் போலீசார், படுகாயம் அடைந்தவர்களை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். செங்கல்பட்டு எஸ்பி கண்ணன், திருப்போரூர் தாசில்தார் செந்தில்குமார், மறைமலைநகர் இன்ஸ்பெக்டர் செல்வம் ஆகியோர் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர்.
வெடித்த பொருளை ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “20 வருடங்களுக்கு மேலாக இங்கு துப்பாக்கி பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அவ்வப்போது துப்பாக்கி பயிற்சி மையத்தில் இருந்து ராக்ெகட் லாஞ்சர்கள் மற்றும் துப்பாக்கி குண்டுகள் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்திலும், வீடுகளிலும் விழுந்து வெடிக்கிறது. ஒரு முறை அங்கன்வாடி மையத்தில் விழுந்தபோது, குழந்தைகள் இல்லாததால் உயிர் சேதம் ஏற்படவில்லை. அஞ்சூர் பகுதியில் தொகுப்பு வீட்டில் விழுந்து கட்டிடம் சேதமானது. கடந்த 5 மாதத்திற்கு முன்பு வெடிக்கப்படாத ஏராளமான ராக்கெட் லாஞ்சர்கள் கண்டெடுக்கப்பட்டு மீனம்பாக்கம் ராணுவ தளத்தில் போலீசார் ஒப்படைத்தனர். இந்த பகுதியில் இந்த பயிற்சி மையம் வேண்டாம் என்று பல முறை கோரிக்கை வைத்தும் எந்த பயனும் இல்லை. இரவு நேரங்களில் பயிற்சியின்போது அதிக சத்தம் கேட்பதால் பயத்தில் வசித்து வருகிறோம்’ என்றனர்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில், அனுமந்தபுரம் துப்பாக்கி பயிற்சி மையத்தில் இருந்து வெடிக்காத ராக்கெட் லாஞ்சரை ராமகிருஷ்ணன் பைக்கில் எடுத்து வரும்போது கீழே விழுந்து வெடித்தது. இது தொடர்பாக ராமகிருஷ்ணன் வீட்டில் சோதனை நடத்தினர். அங்கு, குவியல் குவியலாக ராக்கெட் லாஞ்சர் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை போலீசார் கைப்பற்றி, வண்டலூர் அருகே முருகமங்கலத்தில் உள்ள வெடிகுண்டு கிடங்கில் வைத்துள்ளனர். இதுகுறித்து செங்கல்பட்டு எஸ்பி கண்ணன் கூறுகையில், லாஞ்சரை ராமகிருஷ்ணன், எடுத்து வரும்போது விபத்து ஏற்பட்டுள்ளது. பழைய இரும்புக்காக எடுத்து வந்ததாக கூறினார். அவைகளில் வெடிக்காத குண்டும் இருந்தது. அவற்றை பாதுகாப்பாக வைத்துள்ளோம். நீதிமன்ற உத்தரவை பெற்று, வெடிக்காத குண்டுகளை செயலிழக்க வைப்போம்’ என்றார்.
கடந்த 3 மாதத்திற்கு முன்பு மானம்பதி பகுதியில் வெடிகுண்டு வெடித்து 2 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர். வெடிக்கப்படாத அதி பயங்கர ராக்கெட் லாஞ்சரை வெடிகுண்டு நிபுணர்கள் செயல் இழக்க வைத்தனர். இதை தொடர்ந்து அனுமந்தபுரம் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.