டாஸ்மாக் பாரில் அடிதடி வியாபாரி மண்டை உடைப்பு
12/10/2025 3:55:33 PM
ஆவடி: ஆவடி அருகே டாஸ்மாக் பாரில் நடந்த அடிதடியில் வியாபாரி மண்டையை உடைத்த கார் டிரைவர் கைது செய்யப்பட்டார். ஆவடியை அடுத்த முத்தாபுதுப்பேட்டை, மேலப்பேடு, ஓம் சரவணா நகரை சேர்ந்தவர் அன்பு ஆரோக்கியராஜ் (31). இவர் திருநின்றவூர்- பெரியபாளையம் நெடுஞ்சாலையில், மளிகை கடை நடத்தி வருகிறார். அதே பகுதியில் உள்ள பால்வாடி தெருவை சேர்ந்த கார் டிரைவர் தினகரன் (31).நேற்று முன்தினம் இரவு பாலவேடு ஏ.என்.எஸ் நகரில் உள்ள டாஸ்மாக் பாரில் மேற்கண்ட இருவரும் தனித்தனியாக மது அருந்தியுள்ளனர். போதை ஏறியதும் அன்பு ஆரோக்கியராஜ் எழுந்து சென்று தினகரனிடம் 20 ரூபாய் கேட்டுள்ளார். இதனால் கோபம் அடைந்த தினகரன், ‘’என்னிடம் ஏன் பணம் கேட்கிறாய்’’ என்று வாக்குவாதம் செய்துள்ளார்.
இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பமாக மாறியது. திடீரென தினகரன், அங்கிருந்த பீர் பாட்டிலை எடுத்து அன்பு ஆரோக்கியராஜ் தலையில் சரமாரி அடித்ததில் மண்டை உடைந்து ரத்தம்கொட்டியதால் அன்பு ஆரோக்கியராஜ் மயங்கி விழுந்தார். இதனால் அங்கிருந்து தினகரன் தப்பிவிட்டார்.இதன்பிறகு அப்பகுதியினர் அன்பு ஆரோக்கியராஜை மீட்டு திருவள்ளூரில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுபற்றிய புகாரின் அடிப்படையில், முத்தாபுதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசங்கர் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து நேற்று தினகரனை கைது செய்தனர். பின்னர் அவரை அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.