எம்பிபிஎஸ் மாணவியை பலாத்காரம்: ஆணழகன் அதிரடி கைது
12/10/2025 3:46:28 PM
திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் எம்பிபிஎஸ் மாணவியை கடத்தி பலாத்காரம் செய்து, பணம், நகையை பறித்த ஆணழகனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள வர்க்கலா பகுதியை சேர்ந்தவர் ராகுல் (23). பாடிபில்டிங் பயிற்சி மேற்கொண்டு வந்தார். தொடர்ந்து பல்வேறு இடங்களில் நடந்த போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகள் பெற்றுள்ளார். கடந்த வருடம் கொல்லத்தில் நடந்த ஆணழகன் போட்டியில் கலந்துகொண்டு மிஸ்டர் கொல்லம் பட்டம் பெற்றார்.
இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பெங்களூரில் எம்பிபிஎஸ் படிக்கும் மாணவிக்கும் காதல் ஏற்பட்டது. மாணவியை பல்வேறு இடங்களுக்கு அழைத்து திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்துள்ளார்.
அதோடு அவரை மிரட்டி பல கட்டமாக ரூ.8 லட்சம் பணம், 10 பவுன் நகை ஆகியவையும் வாங்கியுள்ளார். இந்த நிலையில் கடந்த வாரம் ராகுல் திடீரென கத்தார் சென்று விட்டார். அதன்பின்னர் தான் அவர் தன்னை ஏமாற்றியதை மாணவி உணர்ந்தார்.
இதையடுத்து கடந்த 1ம் தேதி கேரள டிஜிபி லோக்நாத் பெக்ராவிடம் புகார் அளித்தார். இதுதொடர்பாக விசாரிக்கும்படி வர்க்கலா போலீசுக்கு டிஜிபி உத்தரவிட்டார். இதன்படி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று ராகுல், வர்க்கலா திரும்பி உள்ளதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று அவரை கைது செய்து ஆற்றிங்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.