கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் சாமி தரிசனம் நடிகை நயன்தாராவை காண திரண்ட ரசிகர்கள்: தள்ளுமுள்ளுவால் பரபரப்பு
12/10/2025 3:43:39 PM
கன்னியாகுமரி: மூக்குத்தி அம்மன் வேடத்தில் நடிக்க உள்ள நடிகை நயன்தாரா, நேற்று கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அவரை காண ஏராளமான ரசிகர்கள் திரண்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கன்னியாகுமரி பகவதியம்மனின் மகிமையை விளக்கும் வகையில் மூக்குத்தி அம்மன் என்ற படம் தயாராகிறது. இந்த படத்தில் மூக்குத்தி அம்மனாக நடிகை நயன்தாரா நடிக்கிறார். இந்த படத்துக்கான பூஜை கடந்த சில வாரங்களுக்கு முன்பு, பகவதியம்மன் கோயிலில் மிக ரகசியமாக நடந்தது.
வெளிநாட்டில் இருந்ததால் படத்தின் பூஜையில் நடிகை நயன்தாரா பங்கேற்கவில்லை. பட பூஜைக்கு பிறகு படக்குழுவினர் அனைவரும் விரதம் தொடங்கி விட்டனர் என்று கூறப்படுகிறது. அதே வேளையில் நடிகை நயன்தாரா வெளிநாட்டில் இருந்ததால் விரதம் தொடங்க வில்லை என்று சொல்லப்பட்டது. சமீபத்தில் சென்னை திரும்பிய நயன்தாரா, நேற்று இரவு திடீரென கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலுக்கு வந்தார்.
அவரது வருகை மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டு இருந்தது. இரவு சுமார் 7 மணியளவில் நடிகை நயன்தாரா வி.ஐ.பி.க்கள் செல்லும் வழியாக கோயிலுக்குள் சென்றார். அவருடன் காதலன் விக்னேஷ் சிவனும் வந்தார். பகவதியம்மன் முன்பு சுமார் அரை மணி நேரம் நடிகை நயன்தாரா அமர்ந்து வேண்டினார். அதைத் தொடர்ந்து கோயில் பிரகாரத்தை சுற்றி தரிசனம் செய்தார். தற்போது சபரிமலை சீசன் என்பதால், கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அதிகமாக உள்ளது.
கோயில் பிரகாரத்தை சுற்றி வந்த நடிகை நயன்தாரா, ஐயப்ப பக்தர்களை வணங்கினார். நடிகை நயன்தாரா வந்திருந்த தகவல் காட்டுத் தீ போல் பரவியது. இதையடுத்து ஏராளமான சுற்றுலா பயணிகளும், ரசிகர்களும் பெருமளவில் திரண்டனர். அவரது காரை சுற்றிலும் ரசிகர்கள் முண்டியடித்தனர். இதனால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. பெரும் சிரமத்துக்கு இடையே காவல்துறையினர் பாதுகாப்பாக நடிகை நயன் தாராவை அனுப்பி வைத்தனர். மூக்குத்தி அம்மன் படப்பிடிப்பு முழுவதும் கன்னியாகுமரியில் நடைபெறும் என்று கூறப்படுகிறது.
பெண் போலீஸ் செல்பி
நடிகை நயன்தாரா வருகையை முன்னிட்டு பெண் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது பெண் போலீசாருடன் இணைந்து நடிகை நயன்தாரா செல்பி எடுத்துக் கொண்டார். அவருடன் இணைந்து போட்டோ எடுக்க போலீசாரும் அதிக ஆர்வம் காட்டினர்.