ஜனநாயகத்தின் குரல் வளையை நெருக்குவது தான் பாஜவின் நோக்கம்: சத்தியமூர்த்திபவனில் நடைபெற்ற கூட்டத்தில் ப.சிதம்பரம் பேச்சு
12/8/2025 2:14:40 PM
சென்னை: ஜனநாயகத்தின் குரல் வளையை நெருக்குவது தான் பாஜவின் நோக்கமாக உள்ளது என்று ப.சிதம்பரம் கூறினார். முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் டெல்லியில் இருந்து நேற்று முன்தினம் ெசன்ைன வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், இன்றைய அரசியல் சூழல் என்ற தலைப்பில் சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் ப.சிதம்பரம் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்துக்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை வகித்தார். காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் சஞ்சய் தத், புதுவை அமைச்சர் நமச்சிவாயம், தங்கபாலு, பீட்டர் அல்போன்ஸ், கிருஷ்ணசாமி, நாசே ராமச்சந்திரன், கோபண்ணா, எம்பிக்கள் கார்த்தி சிதம்பரம், ஜெயக்குமார், விஷ்ணு பிரசாத், முன்னாள் எம்பி ராணி, எம்எல்ஏக்கள் பிரின்ஸ், ராஜேஷ், சிரஞ்சீவி, தாமோதரன், வக்கீல் செல்வம், பொன்.கிருஷ்ணமூர்த்தி, இரா.மனோகர், நாஞ்சில் பிரசாத், சுமதி அன்பரசு, ரஞ்சன்குமார், மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், சிவ ராஜசேகரன், வீரபாண்டியன், ரூபி மனோகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சத்தியமூர்த்திபவனில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ப.சிதம்பரம் பேசியதாவது: பாஜ ஆட்சியில் வேலையின்மை அதிகரித்துவிட்டது. அவர்களது நோக்கமே ஜனநாயகத்தின் குரல்வளையை நெருக்குவது தான். கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சிக்கு 3 எம்.பி.க்கள் இருந்தார்கள். அவர்களில் 2 பேர் வீடுகளில் பாஜ அரசு சோதனை நடத்தியது. இதற்கு பயந்து மற்றொரு எம்.பி., பாஜவில் போய் இணைந்துவிட்டார். ஆந்திராவிலும் இதே நிலைமை தான்.டெல்லியில் வெங்காயம் விலை ரூ.200ஐ தொட்டுவிட்டது. நாடு முழுவதும் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துவிட்டது. 3.5 சதவீதம் பொருளாதார வளர்ச்சியில் நாடு எவ்வாறு உயரும்?. இப்போது கார் கம்பெனிகளில் வேலை பார்த்து வந்தவர்களில் ஒரு லட்சம் பேர் வரை வேலை இழந்து தவித்து வருகின்றனர்.இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் கூட ரிசர்வ் வங்கியிடம் இருந்து ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் கோடியை பறித்து 800 முதலாளிகளுக்கு வழங்கி இருக்கிறார்கள். அடுத்த ஜி.எஸ்.டி. கூட்டம் தொடங்கும்போது அவர்கள் வரியை மேலும் கூட்ட திட்டமிட்டு இருக்கிறார்கள்.
அதாவது, 5 முதல் 8 சதவீதம் வரையிலும், 8 முதல் 12 சதவீதம் வரையிலும், 12 முதல் 18 சதவீதம் வரையிலும் வரியை கூடுதலாக உயர்த்த முடிவு செய்து இருக்கிறார்கள். நான் 106 நாட்கள் சிறையில் இருந்துள்ளேன். சிறையில் இருப்பது பெரிய விஷயம் அல்ல. காமராஜர், வ.உ.சி. போன்றவர்கள் சிறையில் இருந்திருக்கிறார்கள். அதனால் சிறையில் இருந்தது மகிழ்ச்சி தான். சிறை கட்டிலில் படுத்ததால் என் கழுத்து எலும்பு சரியாகி உள்ளது. காங்கிரஸ் இயக்கம் இருக்கும் வரை, தொண்டர்கள் இருக்கும் வரை என்னை யாராலும் வீழ்த்த முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.