ரிசாட்-2பிஆர்1 செயற்கைகோள் 11ம் தேதி விண்ணில் பாய்கிறது
12/5/2025 3:37:03 PM
சென்னை: புவி கண்காணிப்பு பணிக்காக ரிசாட்-2பிஆர்1 செயற்கைகோளை வரும் 11ம் தேதி பிஎஸ்எல்வி-சி48 ராக்கெட் மூலம் இஸ்ரோ விண்ணில் ஏவுகிறது. புவி கண்காணிப்பு மற்றும் அதிநவீன படங்களை எடுத்து அனுப்பும் திறன் கொண்ட ‘கார்டோசாட்-3’ செயற்கைகோள் மற்றும் அமெரிக்க நாட்டை சேர்ந்த 13 வணிக ரீதியிலான நானோ செயற்கைகோள்களை கடந்த மாதம் 27ம் தேதி பிஎஸ்எல்வி-சி47 ராக்கெட் மூலம் இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. இதேபோல், அடுத்தடுத்து வரும் மார்ச் மாதத்திற்குள் 13 திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் அறித்தார்.
இதில், 6 ராக்கெட்டில் 7 செயற்கைகோள்களை விண்ணில் அனுப்பும் பணிகளில் இஸ்ரோ தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், பிஎஸ்எல்வி-சி48 ராக்கெட் மூலம் புவி கண்காணிப்பு செயற்கைகோளான ரிசாட்-2பிஆர்1 செயற்கைகோளை வரும் 11ம் தேதி இஸ்ரோ விண்ணில் செலுத்த உள்ளது. ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் முதலாவது ஏவுதளத்திலிருந்து மதியம் 3.25 மணிக்கு இஸ்ரோ விண்ணில் ஏவுகிறது.
இதனுடன் இஸ்ரேல், இத்தாலி, ஜப்பான் நாடுகளுக்கு சொந்தமான தலா ஒரு செயற்கைகோள், அமெரிக்காவின் 6 செயற்கைகோள்கள் என 9 வணிக ரீதியிலான செயற்கைகோள்களும் விண்ணில் ஏவப்படுகிறது. இந்தியாவிற்கு சொந்தமான ரிசாட்-2பிஆர்1 செயற்கைகோள் 628 கிலோ எடைகொண்டது. விண்ணில் 576 கி.மீ தொலைவிலும், 37 டிகிரி கோணத்திலும் நிலைநிறுத்தப்படவுள்ளது. பிஎஸ்எல்வி-சி48 ராக்கெட்டானது ஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் ஏவப்படும் 75வது ராக்கெட் ஆகும். இதேபோல், முதலாவது ஏவுதளத்திலிருந்து விண்ணில் ஏவப்படும் 37வது ராக்கெட்டும் இதுவாகும்.